ஆசிய கால்பந்து: இந்திய பெண்கள் அபாரம்

சியாங் மாய்: ஆசிய கால்பந்து தகுதிச் சுற்றில் இந்திய பெண்கள் அணி 2வது வெற்றியை பெற்றது.

ஆஸ்திரேலியாவில், அடுத்த ஆண்டு (மார்ச் 1-21) பெண்களுக்கான ஆசிய கோப்பை கால்பந்து 21வது சீசன் நடக்கவுள்ளது. மொத்தம் 12 அணிகள் பங்கேற்கின்றன. ஆஸ்திரேலியா, சீனா, தென் கொரியா, ஜப்பான் என 4 அணிகள் நேரடியாக தகுதி பெற்றன. மீதமுள்ள 8 இடங்களுக்கு தகுதிச் சுற்று நடக்கிறது. இதில் 34 அணிகள், 8 பிரிவுகளாக விளையாடுகின்றன.

இந்திய அணி 'பி' பிரிவில் தாய்லாந்து, மங்கோலியா, ஈராக், திமோர்--லெஸ்தே அணிகளுடன் இடம் பெற்றுள்ளது. இதற்கான போட்டிகள் தாய்லாந்தில் நடக்கிறது. முதல் போட்டியில் மங்கோலியாவை வீழ்த்திய இந்தியா, 2வது போட்டியில் திமோர்-லெஸ்தே அணியை சந்தித்தது. துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்தியா சார்பில் மணிஷா கல்யாண் 2 (12, 80வது நிமிடம்), அஞ்சு தமாங் (58வது), லிண்டா கோம் (86வது) தலா ஒரு கோல் அடித்து கைகொடுத்தனர்.
தொடர்ந்து 2வது வெற்றியை பதிவு செய்த இந்தியா, 'பி' பிரிவில் 6 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. கடைசி 2 போட்டியில் ஈராக் (ஜூலை 2), தாய்லாந்தை (ஜூலை 5) சந்திக்கவுள்ள இந்தியா, முதலிடத்தை உறுதி செய்யும் பட்சத்தில் ஆசிய கோப்பை பிரதான சுற்றுக்கு தகுதி பெறலாம்.

Advertisement