கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், கால்நடைகளுக்கு 2ம் தேதி முதல் கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் முகாம் நடக்கிறது.

கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:

கால்நடைகளைத் தாக்கும் கோமாரி நோய் , கால் குளம்புகள் உடைய ஆடு, மாடு, பன்றி, மான், யானை போன்ற விலங்குகளை பாதிக்கும் வைரஸ் நோயாகும். இந்நோய் கால்நடைகளுக்கு கடுமையான காய்ச்சலை உண்டாக்கும். எளிதில் தொற்றக்கூடிய நோயாகும். பாதிப்புக்குள்ளான கால்நடைகளின் வாயிலிருந்து நுரை கலந்த உமிழ்நீர் நுால் போல் ஒழுகும். அசை போடும் போது சப்பு கொட்டுவது' போல் சப்தம் உண்டாகும்.

வாயின் உட்பகுதி, நாக்கு மடிப்பு, கால் குளம்புகளின் நடுப்பகுதி ஆகியவற்றில் கொப்புளங்கள் தோன்றி உடைந்து புண்ணாகும். இதனால் தீவனம் உட்கொள்ளாது. சினை மாடுகளுக்கு கருச்சிதைவு ஏற்படும். பாலை அருந்துவதால் கன்றுகளுக்கும் நோய் தாக்கி இறக்க நேரிடும். பால் உற்பத்தி பாதிக்கப்பட்டு நஷ்டத்தை ஏற்படுத்த கூடிய ஓர் கொடிய நோயாகும்.

இந்த நோயை தடுக்கும் வகையில், மாவட்டம் முழுதும், கால்நடைகளுக்கு வரும் 2ம் தேதி முதல் 22ம் தேதி வரை, 21 நாட்கள் கால்நடை பராமரிப்புத்துறை மூலம், தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement