காப்பீடு நிறுவனங்களை இணைக்க கோரி ஊழியர் சங்கம் தீர்மானம்

கோவை; கோவை பகுதி இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஊழியர் சங்கத்தின், 66ம் ஆண்டு மாநாடு, மசக்காளிபாளையம் ரோட்டிலுள்ள ஹர்சா மஹாலில் நேற்று நடந்தது. சங்க நிர்வாகி குமார் தலைமை வகித்தார்.

அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஸ்ரீகாந்த் மிஸ்ரா மாநாட்டை துவக்கி வைத்தார்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்க கூடாது. தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு ஆதரவான, இன்சூரன்ஸ் சட்டத்திருத்த மசோதாவை, மத்திய அரசு கைவிட வேண்டும்.

எல்.ஐ.சி., நிறுவனத்தை பொதுத்துறையில் பாதுகாக்க, அதன் வணிகத்தை உயர்த்த வேண்டும். நான்கு பொதுத்துறை பொதுக்காப்பீடு நிறுவனங்களையும் ஒன்றாக இணைக்க வேண்டும்.

தொழிலாளர்களின் குறைந்தபட்ச மாத ஊதியத்தை, 26 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் இணைச் செயலாளர் கிரிஜா, தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் துணைத்தலைவர் முத்துகுமாரசுவாமி, பொருளாளர் சிவசுப்பிரமணியன், இணைச்செயலாளர் சுரேஷ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். 400க்கு மேற்பட்ட இன்சூரன்ஸ் ஊழியர்கள் பங்கேற்றனர்.

Advertisement