ஈரான் அணு உலைகளை தாக்கியது இப்படித்தான்.. விளக்கமாக சொல்கிறார் டிரம்ப்

வாஷிங்டன்: ஈரானில் உள்ள அணுசக்தி நிலைகள் மீது, வெண்ணெயைப் போல ஊடுருவி சென்று தாக்கியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.


ஈரான்-இஸ்ரேல் இடையிலான போரில் தலையிட்ட அமெரிக்கா, ஈரானை சரண் அடையுமாறு கூறி இருந்தது. ஆனால் ஈரான் அதை பொருட்படுத்தாத நிலையில், 'ஆபரேஷன் மிட்நைட் ஹாமர்' என்ற பெயரில் பங்கர் பஸ்டர் (BUNKER BUSTER) வகை குண்டுகளை வீசி அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. பர்டோவ், நடான்ஸ், இஸ்பஹான் ஆகிய 3 அணு உலைகள் மீது அமெரிக்கா குண்டு வீசி இருக்கிறது.


இதில், 3 அணு உலைகளும் பெரும் சேதமடைந்தது. முதலில் இதனை மறுத்து வந்த ஈரான், அதன்பிறகு ஒப்புக் கொண்டது. இதன்மூலம், ஈரானின் அணுசக்தி ஆயுதங்களை உருவாக்கும் முயற்சி பல ஆண்டுகளுக்கு பின்தங்கி போனதாக அமெரிக்க அதிபர் கூறினார்.


இந்த நிலையில், ஈரான் அணு உலைகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்திய விதம் குறித்து அதிபர் டிரம்ப் விளக்கம் அளித்துள்ளார்.


அவர் கூறியதாவது; ஆரம்பத்தில் மிக மிகக் கடினமாக இருந்தது. ரொம்ப ஆபத்தானதாகவும் இருந்தது. அவர்களுக்கு (ஈரான்) நாங்கள் போதிய அவகாசம் கொடுக்கவில்லை. எங்கள் போர் விமானங்கள் வருவதை அவர்களால் முன்கூட்டியே அறிய முடியவில்லை. தாக்குதலில் இருந்து அணு உலைகளை பாதுகாக்க, நுழைவு பகுதியை மூட முயற்சித்தனர். ஆனால் எங்கள் படையினர் வீசிய குண்டு வெண்ணெயை குத்துவதுபோல் குத்திக் கொண்டு சென்று தாக்கியது. இதில், செறிவூட்டப்பட்டிருந்த யுரேனியம் பாதிக்கப்பட்டு, முழு அணுஉலை திட்டமே அழிந்தது, எனக் கூறினார்.


மேலும் கனடா ஒப்பந்தம் மற்றும் டிக்டாக் குறித்து பேசிய அவர், கனடா சில வரிகளை ரத்து செய்யும் வரையில், அவர்களுடன் வர்த்தக பேச்சுவார்த்தை நிறுத்தப்படுகிறது. அமெரிக்காவில் தடை விதிக்கப்பட்ட டிக்டாக் நிறுவனத்தை வாங்குபவர்களின் பெயர்கள் இன்னும் 2 வாரத்திற்குள் அறிவிக்கப்படும், என்றார்.

Advertisement