கோவில் நிலத்தை ஆக்கிரமித்து விவசாயம் உடனடியாக அகற்ற கிளார் மக்கள் எதிர்பார்ப்பு

கிளார்:காஞ்சிபுரம் அடுத்த கிளார் கிராமத்தில், ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அகத்தீஸ்வரர் கோவிலுக்கு செல்லும் பாதையை மீட்டு, கான்கிரீட் சாலை அமைக்க, கலெக்டர் நடவடிக்கை வேண்டும் என, கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், கிளார் கிராமத்தில், அகத்திய மாமுனிவர் பிரதிஷ்டை செய்து, காஞ்சி மஹா சுவாமிகள் வழிபட்ட, 3,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த அகத்தீஸ்வரர் கோவில் விவசாய நிலங்களுக்கு மத்தியில், அமைந்துள்ளது.
இக்கோவிலுக்கு செல்வதற்கு விவசாய நிலத்தில் மண்பாதை அமைக்கப்பட்டு இருந்தது. பல நுாற்றாண்டுகளாக கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் விவசாய நிலத்தில் உள்ள மண்பாதையை பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில், கோவிலுக்கு செல்லும் பாதையை ஒட்டியுள்ள நிலத்தின் உரிமையாளர் கோவிலுக்கு செல்லும் மண்பாதையை ஆக்கிரமித்து அப்பகுதியில் பயிரிட்டுள்ளார்.
மேலும், பக்தர்களின் வசதிக்காக மின்கம்பத்தில் போடப்பட்டிருந்த தெரு மின்விளக்குகளையும் அகற்றியுள்ளதாக கிராமத்தினர் புகார் தெரிவிக்கின்றனர்.
கிளார் கிராமத்தினர் கூறியதாவது:
அகத்தீஸ்வரர் கோவிலுக்கு செல்லும் பாதையை ஆக்கிரமித்துள்ளதால், கோவிலுக்கு விவசாய நிலத்தின் வரப்பில் செல்வோர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இதனால், கிராம மக்கள் மற்றும் சிவனடியார்கள் 200 பேர், ஊராட்சி தலைவர் தட்சிணாமூர்த்தி மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட விஸ்வ ஹிந்து பரிஷித் சிவானந்தம் தலைமையில் கடந்த ஏப்., 28ம் தேதி, காஞ்சிபுரம் கலெக்டரிடம் மனு அளித்துள்ளோம்.
கடந்த மே 1 தேதி கிளார் ஊராட்சியில் நடந்த கிராம சபையில், அகத்தீஸ்வரர் கோவிலுக்கும், விவசாய மக்களும் கடந்து செல்ல பாதை வேண்டும் எனவும், பாதையில் கான்கிரீட் சாலை அமைக்ககோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
எனவே, ஆக்கிரமிப்பில் உள்ள பாதையை மீட்டு, கிளார் அகத்தீஸ்வரர் கோவிலுக்கு செல்ல கான்கிரீட் சாலை அமைக்க, கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.