திருமணமான 2 மாதத்தில் இளம்பெண் தற்கொலை கணவர், மாமனார், மாமியார் கைது

அவிநாசி: அவிநாசி அருகே திருமணமான இரண்டு மாதத்தில், இளம்பெண், காரில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

திருப்பூர் மாவட்டம், அவிநாசி, கைகாட்டிப்புதுாரை சேர்ந்தவர் அண்ணாதுரை, 53; ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். இவரது மனைவி ஜெயசுதா, 42. இவர்கள் மகள் ரிதன்யா, 27. ஏப்., 11ல் ஈஸ்வரமூர்த்தி - சித்ராதேவி தம்பதி மகன் கவின்குமார், 28, என்பவருடன், ரிதன்யாவுக்கு திருமணம் நடந்தது.

கவின்குமார், திருப்பூர் மாநகர் மாவட்ட காங்., தலைவர் கிருஷ்ணனின் பேரன். திருமணம் முடிந்து, அவிநாசி, பழங்கரையில் கவின்குமார் - ரிதன்யா தம்பதி வசித்தனர்.

நேற்று முன்தினம் மதியம், சேவூர் அருகே செட்டிபுதுாரில் சாலையோரம் நிறுத்தப்பட்டுஇருந்த காருக்குள் ரிதன்யா, விஷம் குடித்து வாயில் நுரைதள்ளி இறந்து கிடந்தார். சேவூர் போலீசார் வழக்கு பதிந்தனர்.

நேற்று, அவிநாசி அரசு மருத்துவமனையில், கவின்குமார், அவரது பெற்றோரிடம், ஆர்.டி.ஓ., மோகனசுந்தரம் விசாரணை நடத்தினார். விசாரணை முடிந்து வெளியில் வந்த மூவரையும், ரிதன்யாவின் உறவினர்கள் கோபத்துடன் தாக்க முயற்சித்தனர். அவர்களிடமிருந்து மூவரும் காரில் ஏறி தப்பினர்.

அவர்களை கைது செய்யக்கோரி, ரிதன்யா வின் உறவினர்கள் அவிநாசி - சேவூர் ரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சு நடத்தினர்.

தற்கொலைக்கு முன் ரிதன்யா, தந்தைக்கு அனுப்பிய ஆடியோ வெளியாகி உள்ளது. அதில், 'என் இறப்புக்கு கணவர், மாமனார், மாமியார் தான் காரணம்; இனி இந்த வாழ்க்கையை வாழ முடியாது. என்னை மன்னித்து விடுங்கள் அப்பா - அம்மா' என, கூறியுள்ளார்.

இதையடுத்து, ரிதன்யாவை தற்கொலைக்கு துாண்டியதாக, கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ராதேவி ஆகியோரை சேவூர் போலீசார் நேற்றிரவு கைது செய்தனர்.

Advertisement