போதை கடத்தல் கும்பல் பிடியில் தமிழ் சினிமா: அர்ஜுன் சம்பத்

13


திருப்பூர்: ''தி.மு.க.,விடம் இருந்து தமிழக மக்களை காப்பாற்றும் வகையில் அ.தி.மு.க., - பா.ஜ., வலுவான கூட்டணியாக உள்ளது'' என்று, ஹிந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்.

அவர் அளித்த பேட்டி: திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில், வரும் 27ம் தேதி, ஹிந்துக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சிவபக்தர்கள் மாநாடு, ஆப்பரேஷன் சிந்துார் வெற்றி என கட்சியின் முப்பெரும் விழா நடக்கிறது. திருச்செந்துார் கோவில் கும்பாபிஷேகத்தில், தமிழ் இல்லாமல் இல்லை. தேவாரம், திருவாசகம் பாட உள்ளனர். ஆகம விதிகள்படி தான் அங்கு கும்பாபிஷேகம் நடக்க வேண்டும்.



திருச்செந்துார் கோவிலுக்கு, சிவ நாடார், 280 கோடி ரூபாய் செலவில் திருப்பணிகளை செய்தார். ஆனால், தி.மு.க., அரசு, தங்களால் தான் நடப்பது போல், விளம்பரம் தேடுகிறது. கோவில் கும்பாபிஷேகங்களுக்கு தி.மு.க., அரசு நிதி ஒதுக்குவது கிடையாது. பக்தர்கள் தான் திருப்பணிகளை செய்கின்றனர். அரசு அனுமதி மட்டும் தான் கொடுக்கிறது.


கல்வித் துறையில், தி.மு.க., அரசு திராவிட கொள்கைகளை புகுத்துகிறது. ஹிந்துக்கள் நடத்தும் கல்வி நிலையம் ஒடுக்கப்படுகிறது. பள்ளி கல்வி துறையில், 60 சதவீதம் கிறிஸ்துவர்கள் ஆதிக்கம் உள்ளது. ஏராளமான ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு, மதமாற்றம் செய்கின்றனர். பள்ளிக் கல்வித் துறையை கிறிஸ்துவர்கள், திராவிட இயக்கத்தின் பிடியில் இருந்து விடுவிக்க வேண்டும்.


போதைப்பொருள் பயன்படுத்தியதாக சினிமா பிரபலங்களை கைது செய்துள்ளனர். ஆனால், ஜாபர் சாதிக், அமீர் உள்ளிட்டோர் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. சினிமா பிரபலங்கள் பங்கேற்கும் பார்ட்டிகளில் போதைப்பொருள் தாராளமாக பயன்படுத்தப்படுகிறது. ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லை. போதை மற்றும் கடத்தல் கும்பல் பிடியில் தமிழ் சினிமா துறை சிக்கி உள்ளது.


அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி வலுவான கூட்டணியாக உள்ளது. இதில், குழப்பத்தை ஏற்படுத்த, தி.மு.க.,வை சார்ந்தவர்கள் சதி வேலையில் ஈடுபடுகின்றனர். அதை முறியடிக்கும் வகையில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, 234 தொகுதிகளிலும் மேற்கொள்ளும் சுற்றுப்பயணம் வெற்றியடைய, ஹிந்து மக்கள் கட்சி துணை நிற்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement