போலீஸ் ஸ்டேஷனில் பிறந்த நாள் சிறுவன் ஆசையை நிறைவேற்றிய போலீசார்

பெண்ணாடம் : பெண்ணாடம் போலீஸ் ஸ்டேஷனில் பிறந்த நாள் கொண்டாட வேண்டும் என்ற சிறுவனின் ஆசையை போலீசார் நிறைவேற்றினர்.

கடலுார் மாவட்டம், பெண்ணாடம், வள்ளியம்மை நகரைச் சேர்ந்தவர் அல்லா பிச்சை, 26; மனைவி அம்ரீன், 24; தம்பதிகளுக்கு அய்லான் அயத், 4; கடந்த 1 வாரத்திற்கு முன் பிறந்த அய்ரா என்ற பெண் குழந்தை உள்ளது. அய்லான் அயத் பெண்ணாடத்தில் உள்ள தனியார் பள்ளியில் யு.கே.ஜி., படிக்கிறார்.

பெற்றோர் மற்றும் உறவினருடன் போலீஸ் ஸ்டேஷன் பகுதியை கடக்கும் போது போலீஸ் ஆக வேண்டும் என்றும், எனது பிறந்த நாளில் இங்கு கேக் வெட்டி கொண்டாட வேண்டும் எனவும் சிறுவன் கூறி வந்தான்.

இந்நிலையில், சிறுவனின் பிறந்த நாள் நேற்று கொண்டாட பெற்றோர் முடிவு செய்தனர். அப்போது, சிறுவன் போலீஸ் ஸ்டேஷனில் 'கேக்' வெட்டலாமா என பெற்றோரிடம் விருப்பத்தை கூறினார். சிறுவனின் உறவினர் ஒருவர் மூலமாக இத்தகவல் போலீசாரிடம் தெரிவிக்கப்பட்டது.

சிறுவனின் பிறந்த நாள் குறித்து போலீசார், எஸ்.பி., ஜெயக்குமாரிடம் தகவல் தெரிவித்தனர். அதற்கு எஸ்.பி., யும் ஒப்புதல் அளித்தார்.

அதைத்தொடர்ந்து, மாலை 6:45 மணிக்கு சப் இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் தலைமையில் சிறுவன் அய்லான் அயத்தின் பிறந்த நாளை உறவினர்களுடன் போலீசார் 'கேக்' வெட்டி கொண்டாடினர். சப் இன்ஸ்பெக்டர் கணேசன், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் சரவணன், கோதண்டபாணி, தனிப்பிரிவு ஏட்டு ரமேஷ் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.

4 வயது சிறுவனின் ஆசையை போலீசார் நிறைவேற்றியது பெண்ணாடம் பகுதியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement