டிரம்ப், நெதன்யாகுவுக்கு எதிராக பத்வா: பிறப்பித்தார் ஈரான் மதத்தலைவர்!

11


டெஹ்ரான்: அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஆகியோர் முஸ்லிம் சமூகத்திற்கு எதிரானவர்கள் என்று அறிவித்து, ஈரான் மதத்தலைவர் அயதுல்லா மாகேரம் ஷிராஜி பத்வா பிறப்பித்துள்ளார்.


இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர் நிறுத்தத்திற்கு பிறகு, அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ஈரான் நாட்டு தலைவர்களிடையே வார்த்தைப் போர் நிலவி வருகிறது. ஈரான் ஆட்சியாளர் அயதுல்லா அலி கமேனியை படுகொலையில் இருந்து காப்பாற்றினேன். அவர் நன்றியில்லாமல் இருக்கிறார் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டினார்.


"அயதுல்லா அலி கமேனியை அவமதிக்கும் விதமான பேச்சுக்களை தவிர்த்தால் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு வருவோம். எங்களின் உண்மையான பலத்தை வெளிப்படுத்த ஒருபோதும் தயங்க மாட்டோம்," என்று ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அபாஸ் அராக்சி எச்சரிக்கை விடுத்திருந்தார்.


இந்த நிலையில், ஈரான் ஆட்சியாளர் கமேனியை கொல்ல திட்டம் போட்டதற்கு கண்டனம் தெரிவித்த அந்நாட்டின் மதத் தலைவர்களில் ஒருவரான அயதுல்லா மாகேரம் ஷிராஜி, அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஆகியோர் முஸ்லிம் சமூகத்திற்கு எதிரானவர்கள் என்று கூறி பத்வா பிறப்பித்துள்ளார்.


மேலும், அவர் கூறியதாவது; முஸ்லிம் சமூகத்தின் மதகுருவின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் அனைவரும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாட்டு தலைவர்களுக்கு எதிராக ஒன்றுபட வேண்டும்.அச்சுறுத்தல்களில் இருந்து மதகுருக்களை பாதுகாப்பது முஸ்லிம்களின் கடமையாகும். இந்த புனிதத்தை மீறுவது மிகப்பெரிய பாவங்களில் ஒன்றாகும். இந்த நாடுகளுக்கு முஸ்லிம் நாடுகள் ஆதரவு அளிக்க தடை விதிக்கப்படுகிறது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு இறை தண்டனை உறுதி, இவ்வாறு கூறியுள்ளார்.

Advertisement