அமெரிக்காவில் தீயணைப்பு படை வீரர்கள் 2 பேர் சுட்டுக்கொலை; காட்டுத்தீயை அணைக்க முயன்ற போது தாக்குதல்

4


வாஷிங்டன்: அமெரிக்காவில் காட்டுத்தீயை அணைக்க முயன்ற தீயணைப்பு படை வீரர்கள் 2 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். மர்மநபர்கள் திடீரென நடத்திய துப்பாக்கிச்சூட்டில் வீரர்கள் 2 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


அமெரிக்காவில் வடக்கு இடாஹோவில், உள்ள கேன்பீல்ட் மலையில் ஏற்பட்ட காட்டுத்தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு படை வீரர்கள் ஈடுபட்டு இருந்தனர். அப்போது மர்மநபர்கள் திடீரென நடத்திய துப்பாக்கிச்சூட்டில், வீரர்கள் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலர் பலத்த காயம் அடைந்தனர்.

துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பியோடியது யார் என அமெரிக்க பாதுகாப்பு படையினர் வனப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து இடாஹோ கவர்னர் பிராட் லிட் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: இந்த தாக்குதல் சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறேன்.



பல தீயணைப்பு படை வீரர்கள் தாக்கப்பட்டு உள்ளனர். இது எங்கள் துணிச்சலான தீயணைப்பு படை வீரர்கள் மீதான ஒரு கொடூரமான நேரடி தாக்குதல். பாதிக்கப்பட்ட வீரர்களின் குடும்பத்தினருக்காக பிரார்த்தனை செய்யுமாறு அனைத்து இடாஹோ மக்களையும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். துப்பாக்கிச்சூடு நடந்த இடத்திற்கு அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ., அதிகாரிகள் விரைந்துள்ளனர்.

Advertisement