காரியாபட்டியில் ஆடு, காய்கறி சந்தை ஏற்படுத்த மக்கள் எதிர்பார்ப்பு

காரியாபட்டி: காரியாபட்டியில் ஆடு, காய்கறி சந்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

காரியாபட்டி பேரூராட்சியில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. சுற்றி உள்ள கிராமங்களில் இருந்து பல்வேறு தேவைகளுக்காகவும், வீட்டுக்கு தேவையான பலசரக்கு, காய்கறிகள் உள்ளிட்ட பொருட்கள் வாங்கவும் ஏராளமான வந்து செல்கின்றனர். ஆங்காங்கே உள்ள கடைகளில் காய்கறிகள் விற்கப்படுகின்றன. இவை பெரும்பாலும் மதுரை மார்க்கெட்டில் இருந்து கொண்டு வரப்படுகின்றன. கீரை, கத்திரிக்காய் உள்ளிட்ட சில காய்கறிகள் அவனியாபுரம் பகுதியிலிருந்து வருகிறது.

அதிக வாடகையால் காய்கறிகளின் விலை அதிகமாக உள்ளது. இது ஒரு புறம் இருக்க, ஆங்காங்கே நடமாடும் காய்கறி கடைகள், உழவர் சந்தை உள்ளன. உழவர் சந்தையில் விற்பனை செய்ய விவசாயிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பதால் வியாபாரிகள் வரவில்லை. உழவர் சந்தையின் செயல்பாடு குறைந்துள்ளது. ரோட்டோரத்தில் விற்கப்படும் காய்கறிகளில் தூசி படிவதால் சுகாதாரம் கேள்விக்குறியாகிறது.

இதனை தவிர்க்க, சுத்தமான காய்கறிகள் கிடைக்க வழி வகை செய்ய வேண்டும். அதற்கு, சுற்றியுள்ள கிராமங்களில் விளைவிக்கப்படும் காய்கறிகளை மதுரை மார்க்கெட்டிற்கு கொண்டு செல்கின்றனர். காரியாபட்டியில் காய்கறிச் சந்தை ஏற்படுத்தினால் விவசாயிகள் நேரடியாக சந்தையில் விற்பனை செய்து நல்ல லாபம் பார்க்க முடியும். சுத்தமான காய்கறிகள் கிடைப்பதுடன் குறைந்த விலைக்கு மக்களுக்கு விற்க முடியும் என்பதில் சந்தேகம் இல்லை. காய்கறி சந்தையுடன் ஆடு சந்தையும் ஏற்படுத்த வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

Advertisement