சிறை நிரப்பும் போராட்டத்திற்கு தயார்: உதயகுமார் அறிவிப்பு * முன்னாள் அமைச்சர் உதயகுமார் அறிவிப்பு

குப்பையில் ஜெயலலிதா படம்

மதுரை: ''ஜெயலலிதா படத்தை குப்பையில் போட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும்'' என எதிர்க்கட்சி துணைத்தலைவர் உதயகுமார் எச்சரித்துள்ளார்.

அவர் கூறியதாவது: தமிழகத்தில் ஜனநாயக ஆட்சியா, காட்டுமிராண்டி ஆட்சியா என்று கேள்வி எழுந்துள்ளது. சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் கோயில் காவலாளி அஜித் போலீஸ் விசாரணையில் கொலை செய்யப்பட்டுள்ளார். இது தேசிய அளவில் நீதி கேட்டு 'ட்ரெண்டிங்காக' உருவாகி உள்ளது. தி.மு.க., ஆட்சியில் இருப்பது காவல் நிலையமா, கொலை நிலையமா என்று கேள்வி எழுந்துள்ளது.

ஸ்டாலின் ஆட்சியில் வரி உயர்வு போல லாக்அப் மரணங்களும் உயர்ந்து வருகிறது. தேசிய மனித உரிமை ஆணையம், லாக் அப் மரணத்தில் தென் மாநிலங்களில் தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது என்று கூறியுள்ளது. தி.மு.க., ஆட்சியில் லாக்கப் மரணம் எடுத்துக் கொண்டால் 2021ல் 2 மரணம், 2022ல் 4 மரணம், 2023ல் 7 மரணங்கள் ஏற்பட்டுள்ளன. ஸ்டாலினுக்கு நிர்வாகம் தெரியவில்லையா அல்லது தெரிந்தும் கையாள தெரியவில்லையா. காவல் துறையை வழிநடத்த தெரியவில்லையா.

வேடசந்துாரில் அரசு விழாவில் ஜெயலலிதா படத்தை குப்பை தொட்டியில் போட்டது வேதனை அளிக்கிறது. ஜெ., பேரவை கண்டனம் தெரிவித்துக்கொள்கிறது. இந்த ஆட்சியை குப்பை தொட்டியில் துாக்கி வீசும் காலம் வெகு தொலைவில் இல்லை. தி.மு.க., அரசு கண்டும் காணாமல் இருப்பது வேதனையின் உச்சமாக இருக்கிறது. சம்பந்தப்பட்ட கயவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்காவிட்டால் ஜெ., பேரவை சார்பில் தமிழகம் முழுவதும் சிறை நிரப்பும் போராட்டம் நடத்த அஞ்ச மாட்டோம். இவ்வாறு கூறினார்.

Advertisement