'ரமணா' பாணியில் பேசிய பிரேமலதா

1

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் 'மா' விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வகையிலும், தமிழக அரசை கண்டித்தும், தே.மு.தி.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.


அதில் பங்கேற்ற பிரேமலதா, விவசாயிகளுடன் சேர்ந்து கோஷம் எழுப்பினார். ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசியதாவது:



தமிழகத்தில் இருக்கும் மா விவசாயிகள் சொல்ல முடியாத துயரை அனுபவித்து வருகின்றனர். மாங்கனி நகரான கிருஷ்ணகிரியிலேயே, மா விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. இதை, விஜயகாந்தின் ரமணா பட பாணியிலேயே சொல்கிறேன்.


கிருஷ்ணகிரி மாவட்டம், 5,143 சதுர கி.மீ., பரப்பு கொண்டது. இதில், 30,017 ஹெக்டேர் பரப்பில் மா சாகுபடி செய்யப்படுகிறது.


ஒரு ஏக்கருக்கு மருந்தடித்து, பராமரிப்பு செய்ய 30,000 ரூபாய்; மா லோடு ஏற்றிச் செல்ல 6,000 ரூபாய்; கூலியாட்களுக்கு 5,000 என மொத்தம் 41,000 ரூபாய் செலவாகிறது.


ஏக்கருக்கு 6 டன் விளைச்சல் வந்தாலும், மொத்த செலவை விட கூடுதலாக கிடைக்க வேண்டும். ஆனால், மாங்கூழ் தொழிற்சாலைகள், 6 டன்னுக்கு 18,000 ரூபாய் தான் கொடுக்கின்றன.


இதனால், மா விவசாயிகளுக்கு, ஏக்கருக்கு 23,000 ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. மாந்தோப்பு குத்தகைக்கு எடுப்பவர்கள், 71,000 ரூபாய் கொடுக்கின்றனர். அவர்களுக்கு, ஏக்கருக்கு 53,000 ரூபாய் இழப்பு ஏற்படுகிறது.


அரசிடம் நிதி இல்லை. கேட்டால், மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளதாக கூறுகின்றனர். தி.மு.க., குடும்ப உறுப்பினர்களான, 'நிதி'க்களின் நிதியை வைத்தே, ஏழு பட்ஜெட் போடலாம். மா விவசாயிகளுக்கு, ஏக்கருக்கு 10,000 ரூபாய் நிவாரணம் கொடுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement