செல்வப்பெருந்தகை செய்த குழப்பம்: வி.சி.க., - காங்கிரஸ் இடையே புகைச்சல்!

4


சென்னை: பா.ம.க.,வை இண்டி கூட்டணிக்குள் இழுக்கும் முயற்சியை தமிழக காங்கிரஸ் மேற்கொள்ளும் முயற்சி கவலை அளிப்பதாக மதுரை வி.சி.க., எம்.பி., ரவிக்குமார் தெரிவித்துள்ளார். இது இண்டி கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


பா.ம.க.,வில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே கடந்த சில தினங்களாக மோதல் போக்கு நிலவி வருகிறது. கட்சிக்குள் யாருக்கு அதிகாரம் என்பதை வெளிப்படுத்தும் விதமாக, நிர்வாகிகளை மாறி மாறி நீக்கியும், சேர்த்தும் வருகின்றனர். குறிப்பாக, கடந்த பார்லிமென்ட் தேர்தலின் போது, பா.ம.க., கூட்டணி விஷயத்தில் அன்புமணியின் தலையீடே தோல்விக்கு காரணம் என்று ராமதாஸ் வெளிப்படையாகக் குற்றம்சாட்டினார்.

அதாவது, அ.தி.மு.க., கூட்டணிக்கு செல்ல தான் விரும்பியதாகவும், அன்புமணியின் கட்டாயத்தின் பேரில் பா.ஜ.,வுடன் கூட்டணி அமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகக் கூறியிருந்தார். அவரது இந்தப் பேச்சு தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.


தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு கூட இல்லாத நிலையில், பா.ம.க.,வில் ஏற்பட்டுள்ள இந்த மோதல் காரணமாக, அக்கட்சியை தங்களின் கூட்டணிக்கு இழுப்பதற்கான முயற்சிகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.

அந்த வகையில், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, சமீபத்தில் பா.ம.க., நிறுவனர் டாக்டர் ராமதாஸை நேரில் சென்று சந்தித்தார். கூட்டணி பற்றி பேசியதாகவும் தகவல் வெளியானது. இதற்கு காங்கிரஸ் கட்சிக்கு உள்ளேயே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

விருதுநகர் காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள பதிவில், "2014ம் ஆண்டு முதல் மோடியுடன் இணைந்து கொண்டு, தற்போது வரையில் அவரது கொள்கைகளை பகிர்ந்து கொள்ளும் ஒரு கட்சியை உங்களின் கூட்டணி கட்சியாக்க எப்படி நீங்கள் விரும்ப முடியும்? அனைத்து சூழ்நிலைகளிலும் உங்களுடன் துணை நின்றவர்களை ஏன் காயப்படுத்த வேண்டும். ஒவ்வொரு போராட்டங்களிலும் மக்கள் தலைவர் ராகுலுக்கு ஆதரவாக நிற்க வேண்டும். இது கட்சியின் கருத்து அல்ல. சொந்த கருத்து," இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.


இந்த விவகாரம் தொடர்பாக, காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபாலுக்கு வி.சி.க., எம்.பி.,யும் பொதுச்செயலாளருமான ரவிக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.


அதில், " வி.சி.க., எப்போதும் மாநில மற்றும் தேசிய அளவில் இண்டி கூட்டணிக்கு விசுவாசமாக இருந்து வருகிறது. அண்மையில் திருச்சியில் 'மதச்சார்பின்மையை காப்போம், அரசியலமைப்பைக் காப்போம்' என்ற முழக்கத்துடன் பிரம்மாண்டமான ஊர்வலத்தை நாம் நடத்தினோம். அனைத்து நேரங்களிலும் ராகுலுடன் உறுதியாக நின்றுள்ளோம்.


இந்த நிலையில், தமிழக காங்கிரஸ் கட்சி, என்.டி.ஏ., கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஒரு கட்சியை (பா.ம.க.,) இண்டி கூட்டணிக்கு இழுக்கும் முயற்சி கவலையை ஏற்படுத்துகிறது. குறிப்பாக, இந்த முயற்சி, தி.மு.க., தலைமையிலான கூட்டணி, பா.ஜ., கூட்டணியை எதிர்க்க போதுமான வலிமையுடன் இல்லை என்பதைப் போல உள்ளது. இதற்கு உங்களின் ஒப்புதல் பெறப்பட்டதா?" என்று கேள்வி எழுப்பினார்.


இதன் மூலம், பா.ம.க.,வை தி.மு.க., கூட்டணிக்குள் இழுக்க காங்கிரஸ் முயற்சிப்பதாக வி.சி.க., குற்றம் சாட்டியுள்ளது. இது, இண்டி கூட்டணியிலும், குறிப்பாக காங்கிரஸ் கட்சிக்கு உள்ளேயும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement