வங்கதேசம் செல்லுமா இந்திய கிரிக்கெட் அணி ? விரிசல் வலுக்கிறதா ?

3


புதுடில்லி: ஆகஸ்ட் மாதம் வங்கதேசம் சென்று ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் இந்திய அணி பங்கேற்க இருந்தது. இச்சுற்றுப்பயணம் ரத்தாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி, ஆகஸ்ட் மாதம் வங்கதேசம் சுற்றுப்பயணம் செய்து, மூன்று ஒருநாள், மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க திட்டமிட்டிருந்தது. ஆகஸ்ட் 17, 20, 23 தேதிகளில் ஒருநாள் போட்டிகளும், 26, 29, 31 தேதிகளில் டி20 போட்டிகளும் நடத்த இருநாடுகளும் முன்பே முடிவு செய்திருந்தன.

இத்தொடர்களை ஒளிபரப்பு செய்வதற்கான ஏலம் ஜூலை 7, 10 தேதிளில் நடக்க இருந்த நிலையில், வங்கதேச கிரிக்கெட் வாரியம் திடீரென நிறுத்தி வைத்தது. இதற்கிடையே வங்கதேசத்தில் ஷேக் ஹசினா ஆட்சி கவிழ்ந்து, முகமது யூனுஸ் தலைமையிலான அரசு பொறுப்பேற்றதில் இருந்து இந்தியா - வங்கதேசம் இடையிலான உறவில் விரிசல் விழ துவங்கியது. வர்த்தகம் ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் இருநாட்டு உறவில் பாதிப்பு நிலவி வரும் நிலையில், மத்திய அரசுக்கும், இந்திய அணியை வங்கதேசம் அனுப்ப உடன்பாடில்லை என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

இந்திய அணி, வங்கதேசம் செல்வதில் சிக்கல் நிலவி வருவதால், அந்நாட்டு கிரிக்கெட் வாரியமும் ஒளிபரப்பு உரிமம் தொடர்பான ஏலத்தை நிறுத்தி வைத்தது. இதனால், ஆகஸ்டில் நடைபெற உள்ள இந்தியா - வங்கதேச கிரிக்கெட் தொடர் ரத்தாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement