தொழிற்சங்கம் போராட்டம் நடத்தினால் முதலீடு செய்ய யார் வருவர்: ஐகோர்ட் கேள்வி

9


சென்னை: 'பிரதமரும், முதல்வரும் எங்கள் நாட்டில் தொழில் துவங்க வாருங்கள் என அழைக்கும்போது, நீங்கள் இவ்வாறு போராட்டம் நடத்தினால், யார் இங்கு முதலீடு செய்ய வருவர்' என, ஹூண்டாய் நிறுவன தொழிற்சங்கத்துக்கு எதிரான வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பிஉள்ளது.

பணி நீக்கம்




காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள, 'ஹூண்டாய் மோட்டார்ஸ்' நிறுவனம் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு: எங்கள் கார் தயாரிப்பு நிறுவனத்தில், ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா தொழிலாளர்கள் சங்கம் செயல்படுகிறது. இந்த சங்கம், நிறுவனத்துக்கு எதிராக, 2008ல் பல்வேறு கோரிக்கைகளுடன் போராட்டம் நடத்தியது. ஒழுங்கீனமாக நடந்த, 64 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.



சட்டவிரோதமாக வேலை நிறுத்தம், போராட்டம், கூட்டம் போன்றவை நடத்த எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்த வழக்கில், நிறுவனத்துக்கு உள்ளே அல்லது நிறுவனத்தை சுற்றியுள்ள பகுதிகளில் யாரும் போராட்டம் நடத்தக் கூடாது என, தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.ஆனால், இந்த தடை உத்தரவை மீறி, ஊழியர்கள் போரட்டத்தில் ஈடுபட்டு வருவது குறித்து புகார் அளித்தும், காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.



எனவே, இந்த தொழிற்சங்கத்தை சார்ந்தவர்கள் போராட்டங்கள் நடத்துவதற்கு விதிக்கப்பட்ட தடையை உடனே அமல்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

எப்படி முன்னேறும்



இந்த மனு, நீதிபதி பி.வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது. தொழிற்சங்கம் தரப்பில், 'எங்களது சங்கம் எந்த வேலைநிறுத்தமும் செய்யவில்லை. முறையாக சங்கத்தை நடத்தி வருகிறோம்' என தெரிவிக்கப்பட்டது.



இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, ''பிரதமரும், தமிழக முதல்வரும் எங்கள் நாட்டில் தொழில் துவங்க வாருங்கள் என, அழைக்கும்போது, நீங்கள் இவ்வாறு போராட்டம் நடத்தினால், யார் முதலீடு செய்ய வருவர்; நாடு எப்படி முன்னேறும்,'' என, கேள்வி எழுப்பினார்.
மனு மீதான உத்தரவை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.

Advertisement