ரஷ்ய அதிபர் புடின் உக்ரைன் மக்களைக் கொல்ல விரும்புகிறார்: டிரம்ப் பகீர் குற்றச்சாட்டு

1


வாஷிங்டன்: "ரஷ்ய அதிபர் புடின் உக்ரைனில் மக்களைக் கொல்ல விரும்புகிறார். இது நல்லதல்ல" என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.


அமெரிக்க அதிபராக இந்தாண்டு ஜனவரியில் பதவியேற்ற டிரம்ப், ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நீண்டகாலமாக நடந்து வரும் போரை நிறுத்த கடும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். அதிகாரப் பூர்வமாக ஆறாவது முறையாக ரஷ்ய அதிபர் புடினுடன் தொலைபேசி வாயிலாக பேச்சு நடத்தினார்.


இந்த பேச்சு ஒரு மணிநேரம் நீடித்தது. இது தொடர்பாக, நிருபர்களிடம் டிரம்ப் கூறியதாவது: இது மிகவும் கடினமான சூழ்நிலை. ரஷ்ய அதிபர் புடின் உடனான தொலைபேசி அழைப்பு எனக்கு மிகவும் அதிருப்தியை ஏற்படுத்தியது.


அவர் உக்ரைனில் மக்களைக் கொன்று கொண்டே இருக்க விரும்புகிறார். இது நல்லதல்ல. நானும், புடினும் தொலைபேசியில் பேசியபோது, பொருளாதார தடைகள் குறித்து நிறைய பேசினோம். அவை வரக்கூடும் என்பதை அவர் புரிந்து கொள்கிறார்.


உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தனது நாட்டின் பாதுகாப்புக்கு ஏவுகணைகள் தேவைப்படும் எனக் கூறியுள்ளார். அவர்களுக்கு அவை தற்காப்புக்காகத் தேவைப்படும். அவர்கள் கடுமையாக தாக்கப்படுகிறார்கள். இவ்வாறு டிரம்ப் கூறினார்.


ரஷ்யா, உக்ரைன் மீது இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலை நடத்திய பின்னர், ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகள் குறித்து டிரம்ப் ஆலோசித்து வருவதாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement