அஜித் குமார் கொலை வழக்கு வலைத்தளத்தில் களமிறங்கிய போலீஸ் குடும்பம்

1

மானாமதுரை:சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில் போலீஸ் மீது உள்ள களங்கத்தை போக்க போலீசார் குடும்பத்தினர் சமூகவலைத்தளங்களில் தீவிரமாக பதிவிட்டு வருகின்றனர்.

திருப்புவனம் அருகே மடப்புரத்தில் உள்ள பத்ரகாளியம்மன் கோயில் தற்காலிக காவலாளியான அஜித்குமார் நகை திருட்டு புகாரில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்டார்.

இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களும் போலீசுக்கு எதிராக குரல் கொடுக்க துவங்கியுள்ளனர். மேலும் சமூக வலைத்தளங்களிலும் போலீசுக்கு எதிராக அனைத்து தரப்பினரும் பதிவுகளை போட்டு வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து போலீஸ் மீது ஏற்பட்டுள்ள களங்கத்தை போக்கும் வகையில் மானாமதுரை சப் டிவிஷனுக்குட்பட்ட ஸ்டேஷன்களில் பணியாற்றும் போலீசார் தங்களது அலைபேசிகளின் வாட்ஸ்ஆப், முகநுால், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் போலீஸ் மீது மரியாதையை ஏற்படுத்தும் வகையில் உள்ள பதிவுகளை தொடர்ந்து வைத்து வருகின்றனர்.

மேலும் அவர்களது குடும்பத்தினர்களும்,உறவினர்களும் இதே போன்ற பதிவுகளை வைத்து வருகின்றனர்.

போலீசார் சிலர் கூறியதாவது: இக்கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட போலீசார் அவர்கள் செய்த தவறுக்கு தண்டனையை அனுபவித்து வருகின்றனர்.

பொதுமக்கள் மத்தியில் ஏற்கனவே போலீசின் மீது நன்மதிப்பை விட வெறுப்பே கூடுதலாக உள்ளது. இந்நிலையில் இச்சம்பவம் மேலும் வெறுப்பை உண்டாக்கியுள்ளது. ஒட்டு மொத்த போலீசின் மீது விழுந்த களங்கத்தை சிறிதாவது குறைக்கும் வகையில் வலைத்தளங்களில் பதிவுகளை போட்டு வருகிறோம் என்றனர்.

Advertisement