1,000 ஆல மரக்கன்று நடும் விழா மாவட்ட நீதிபதி துவக்கி வைப்பு

வாலாஜாபாத்:நத்தாநல்லுாரில், விதைகள் தன்னார்வ அமைப்பு சார்பில் நடந்த, 1,000 ஆல மரக்கன்று நடும் விழாவை, மாவட்ட முதன்மை நீதிபதி துவக்கி வைத்தார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருட்டு, விதைகள் தன்னார்வ அமைப்பு சார்பில், பொது இடங்கள், அரசு காலி மனைகள் மற்றும் நீர்நிலைகள் உள்ளிட்ட பகுதிகளில் பல வகையான மரக்கன்றுகள் நடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சில இடங்களில், ஊராட்சி நிர்வாகம் மற்றும் தனியார் நிறுவனத்துடன் இணைந்து குருங்காடு உருவாக்குதல் திட்டமும் மேற்கொள்ளப்படுகிறது.

மேலும், ஆண்டுக்கு ஒரு லட்சம் பனை விதைகள் என, நான்கு ஆண்டுகளில், காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நான்கு லட்சம் பனை விதைகள் நடப்பட்டுஉள்ளன.

இந்நிலையில், இந்த அமைப்பினர் நத்தாநல்லுார் சுற்றுவட்டார கிராமங்களில், 1,000 ஆல மரக்கன்றுகள் நடவு செய்ய திட்டமிட்டு உள்ளனர்.

இதற்கான துவக்க விழா நத்தாநல்லுார், மேல்தாங்கல் பகுதியில் நேற்று நடைபெற்றது.

விதைகள் தன்னார்வ அமைப்பு தலைவர் பசுமை சரண் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட வணிகர் சங்க செயலர் வெங்கடேசன் ஆகியோர் நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்றனர்.

காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிபதி செம்மல் பங்கேற்று ஆல மரக்கன்றுகள் நடும் விழாவை துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், நத்தாநல்லுார் ஊராட்சி தலைவர் மணி, அப்பகுதி தி.மு.க., ஒன்றிய கவுன்சிலர் சஞ்சீவ்காந்தி உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement