பூத்திற்கு 37 ஓட்டுகள் கூடுதலாக பெற்றால் தி.மு.க., அணியை வீழ்த்தலாம்: நாகேந்திரன்

3

சென்னை : ''தி.மு.க., கூட்டணியை விட, ஒரு பூத்திற்கு 37 ஓட்டுகள் கூடுதலாக பெற்றால், 202 தொகுதிகளில், தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும்,'' என, தமிழக பா.ஜ., தலைவர் நாகேந்திரன் பேசினார்.


செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்துாரில் உள்ள, எஸ்.ஆர்.எம்., பல்கலை வளாகத்தில், பா.ஜ., பூத் கமிட்டியை வலுப்படுத்தும் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது.



இதில் தமிழக பா.ஜ., தலைவர் நாகேந்திரன் பேசியதாவது:

மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில், 5 லட்சம் பேர் கூடினர். மாநாடு வெற்றிகரமாக நடந்ததால், தி.மு.க.,வினர் துாங்காமல் உள்ளனர்.

'லாக் அப்' மரணம்



'தமிழகத்தை ஓரணியில் திரட்ட வேண்டும்' என, முதல்வர் சொல்கிறார். நாம் இப்போதே ஓரணியில்தான் இருக்கிறோம். நமக்கும் ஸ்டாலின்தான் முதல்வர். ஆனால், அவர் செய்யக்கூடிய காரியங்கள் சரியில்லை.



தமிழகத்தில் பாலியல் பலாத்காரம் அதிகரித்து விட்டது. இந்த ஆட்சியில், 24 'லாக் அப்' மரணங்கள் நடந்துள்ளன. சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களில், கோகைன், போதைப் பொருட்கள் தாராளமாக கிடைக்கின்றன.



தி.மு.க., ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். ஜார்ஜ் கோட்டையில், தேசிய ஜனநாயக
கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும். அதற்கு 'பூத் கமிட்டி'யை பலப்படுத்த வேண்டும்.


ஏற்கனவே 'பூத் கமிட்டி' உள்ளது. அதில் உள்ள பலர் கட்சி செயல்பாட்டில் இல்லை. கட்சி
தலைமை கேட்டதால், அவசர கதியில் பட்டியல் தயாரித்து கொடுத்துள்ளனர். இனி இதுபோன்று இருக்கக்கூடாது. ஏற்கனவே உள்ள பட்டியலை சரி பார்க்க வேண்டும்.

வியூகம்



ஒரு பூத்திற்கு குறைந்தது, 12 பேரை சேர்க்க வேண்டும். அவ்வாறு செய்தால், ஒரு சட்டசபை தொகுதிக்கு 3,600 பூத் ஏஜன்டுகள் கிடைப்பர்.

இவர்களை வைத்து மண்டல மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளோம். பூத் ஏஜன்டுகள் அக்கம், பக்கத்தில் பேசி பழகி, 3,600 புதிய உறுப்பினர்களை, கட்சியில் சேர்க்க முடியும்.

தமிழகத்துக்கான தேர்தல் வியூகங்களை உள்துறை அமைச்சர் அமித் ஷா பார்த்துக் கொள்வார். கடந்த லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., - பா.ஜ., பெற்ற ஓட்டுகளை கணக்கிட்டு பார்த்தால், தி.மு.க.,வை விட 24 லட்சம் ஓட்டுகள் மட்டுமே குறைவு. இதை, 234 தொகுதிகளுக்கும் கணக்கிட்டு பார்த்தால், 11,000 ஓட்டுகள் வருகின்றன. பூத்திற்கு கணக்கிட்டு பார்த்தால், 37 ஓட்டுகள் மட்டுமே குறைகிறது.

இந்த வேறுபாட்டை சரி செய்தால், 202 தொகுதிகளில், தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும். அதற்கான பணிகளை பூத் கமிட்டிநிர்வாகிகள் செய்ய வேண்டும்.

வரும் 2026ம் ஆண்டு தேர்தல் நமக்கு முக்கியமல்ல; 2029ம் ஆண்டு லோக்சபா தேர்தல்தான் நோக்கம்.

அதற்கான அடித்தளத்தை சட்டசபை தேர்தலில் அமைக்க வேண்டும். அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, மேட்டுப்பாளையத்தில் சுற்றுப்பயணத்தை துவங்க உள்ளார்.

அதில், பா.ஜ., தலைவர்களும் கலந்து கொள்வர். பழனிசாமி செல்லும் இடமெல்லாம், நம்முடைய தொண்டர்கள் பலத்தை காட்ட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

@block_B@

அடுத்தடுத்து மண்டல மாநாடுகள்

கூட்டத்தில், பா.ஜ., சார்பில் அடுத்தடுத்து மண்டல மாநாடுகள் நடத்த முடிவு செய்யப்பட்டது. முதல் மண்டல மாநாடு, நெல்லையில் ஆகஸ்ட் 17, மதுரையில் செப்.,13 இரண்டாவது மாநாடு ; அக்.,26 கோவையில் மூன்றாம் மாநாடு; நவ.,23 சேலத்தில் நான்காம் மாநாடு; தஞ்சாவூரில் டிச.,21 ஐந்தாவது மாநாடு; திருவண்ணாமலையில் ஜன.,4ம் தேதி ஆறாவது மாநாடு; திருவள்ளூரில் ஜன.,24ம் தேதி ஏழாவது மாநாடு நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.block_B

Advertisement