தோஷம், சூனியம் இருப்பதாக கூறி வருவோரை வீட்டிற்குள் அனுமதிக்காதீர் சங்கராபுரம் போலீஸ் எச்சரிக்கை

சங்கராபுரம்: ரிப்பேர் செய்ய வருபவர்களையும், தோஷம், சூனியம் உள்ளது என கூறி வருபவர்களை வீட்டிற்குள் அனுமதிக்க வேண்டாம் என சங்கராபுரம் போலீசார் பொதுமக்களை கேட்டு கொண்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாக, வீட்டை உடைத்து திருட்டு, வீட்டிற்குள் புகுந்து கத்தியை காட்டி மிரட்டி நகை பணம் கொள்ளை, வழிப்பறி என குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனால், மாவட்ட மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். இந்நிலையில், திருட்டு சம்பவங்களில் இருந்து தங்களைப் பாதுகாத்து கொள்ள சங்கராபுரம் போலீசார் நேற்று விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர்.

அதில், இன்ஸ்பெக்டர் விநாயகமுருகன் கூறியிருப்பதாவது;

வீட்டின் கதவை திறந்து வைத்து துாங்க கூடாது. திருடர்கள் நீங்கள் அணிந்திருக்கும் நகைகளை பறிக்கவும், வீட்டில் உள்ள பொருட்களை திருட வாய்ப்புள்ளது. வெளியூர்களுக்கு சென்றால், விலை உயர்ந்த நகைகள், பணம் உள்ளிட்டவற்றை வங்கி லாக்கரில் வைக்கவும். வெளியூர் செல்லும்போது போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து சென்றால், போலீசார் உங்கள் வீடுகளை கண்காணிப்பர்.

துடைப்பம் விற்பவர், எலக்ட்ரீசியன், மிக்சி, கிரைண்டர், காஸ் ஸ்டவ் ரிப்பேர் செய்ய வருபவர்களையும், தோஷம், சூனியம் உள்ளது என கூறி வருபவர்களை வீட்டிற்குள் அனுமதிக்க வேண்டாம். தங்க நகைகளை பாலீஷ் போட்டு தருவதாக வருபவர்களிடம் நகைகளை கொடுத்து ஏமாற வேண்டாம்.

இரவு நேரத்தில் வீட்டின் முன்புறம், பின்புறம் மின் விளக்குகளை எரியவிட வேண்டும். இரவு நேரங்களில் காலிங் பெல் அடித்தால், ஜன்னல், கதவு லென்ஸ் வழியாக வந்திருப்பவர்கள் யார் என்று பார்த்துவிட்டு, தெரிந்த நபர்கள் வந்திருந்தால் மட்டும் கதவை திறக்கவும். இல்லையென்றால் கதவை திறக்க கூடாது. இதனை பின்பற்றி சங்கராபுரம் பகுதியில் திருட்டு சம்பவங்கள் நடக்காமல் இருக்க போலீசாருக்கு ஒத்துழைக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement