ரபேல் போர் விமானம் குறித்து அவதூறு; சீனாவின் குள்ளநரித்தனம்

8


பாரிஸ்: ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்குப் பிறகு உலக நாடுகளிடையே வரவேற்பை பெற்ற ரபேல் போர் விமானம் குறித்து சீனா போலியான தகவலை பரப்பி வருவதாக பிரான்ஸ் குற்றம்சாட்டியுள்ளது.


பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானுக்குள் புகுந்து இந்தியா நடத்திய தாக்குதலுக்கு ரபேல் போர் விமானங்கள் முக்கிய பங்காற்றின. இதையடுத்து, பிரான்ஸ் தயாரிப்பான ரபேல் போர் விமானங்களுக்கு உலகளவில் மவுசு கூடியது.


ரபேல் போர் விமானங்களை கொள்முதல் செய்ய பல்வேறு உலக நாடுகள் ஒப்பந்தம் செய்து வருகின்றன. இதுவரையில் பிரான்ஸின் டசால்ட் ஏவியேஷன் நிறுவனம் 533 ரபேல் விமானங்களை விற்பனை செய்துள்ளது. அதில், இந்தியா, கத்தார், எகிப்து, கிரீஸ் மற்றும் குரோஷியா, யு.ஏ.இ., இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கு மட்டும் 323 விமானங்கள் விற்கப்பட்டுள்ளது. இந்தோனேசியா 42 ரபேல் விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது.


இந்த நிலையில், தங்களின் முதன்மை போர் விமானமான ரபேலின் விற்பனையை சீர்குலைக்கவும், சீன போர் விமானங்களின் விற்பனையை அதிகரிக்கும் வகையில் சீனா செயல்பட்டு வருவதாக பிரான்ஸ் குற்றம்சாட்டியுள்ளது.


ஆபரேஷன் சிந்தூரின் போது, இந்தியா பயன்படுத்திய ரபேல் போர் விமானம் பாகிஸ்தானால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக, பொய்யான தகவல்களை சீனா பரப்பி வருகிறது. இது பிரான்ஸ் நாட்டுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இது குறித்து பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருப்பதாவது; பிரான்ஸின் ரபேல் போர் விமானங்களின் விற்பனையை குறைக்க சீனா முயற்சிக்கிறது. இந்தியா - பாகிஸ்தானுக்கு இடையேயான போரில் ரபேல் விமானத்தின் செயல்பாடு மோசமாக இருந்ததாக தவறான தகவலை பரப்பி வருகின்றனர். சீனா ராணுவ உபகரணங்களை விற்பனையை அதிகரிக்க இந்த செயலில் ஈடுபட்டு வருகின்றனர், என தெரிவித்துள்ளது.


இந்தியா - பாகிஸ்தான் போரின் போது புதிதாக 1,000 சமூக வலைதளப்பக்க கணக்குகள் தொடங்கப்பட்டு, சீனா ராணுவ தொழில்நுட்பம் குறித்து ஆதரவு கருத்துக்கள் பகிரப்பட்டதாகவும் பிரான்ஸ் குற்றம்சாட்டியுள்ளது.

Advertisement