ரயில் நிலையத்தில் பிரசவம் பார்த்து உதவிய ராணுவ மருத்துவர்: பாராட்டி கவுரவித்தார் தலைமை தளபதி!

4

புதுடில்லி: உத்தரபிரதேசத்தில் ரயில் நிலையத்தில் பிரசவ வழியால் துடித்துக் கொண்டிருந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு, குழந்தையை பிரசவிக்க உதவிய ராணுவ மருத்துவருக்கு ராணுவ தளபதி உபேந்திரா திவேதி பாராட்டு தெரிவித்துள்ளார்.



நேற்று (ஜூலை 6) பன்வெல்-கோரக்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த ஒரு கர்ப்பிணிப் பெண்ணிற்கு கடுமையான பிரசவ வலியை எதிர்கொண்ட நிலையில், அவரை உறவினர்கள் ஜான்சி ரயில் நிலையத்தில் இறக்கினர்.


சூழ்நிலையை அறிந்த ஒரு பெண் டிக்கெட் பரிசோதகரும் ஒரு ராணுவ அதிகாரியும் விரைந்து வந்து அந்த கர்ப்பிணி பெண்ணிற்கு உதவினர். இந்த நிலையில் ரயிலுக்காக அங்கு காத்திருந்த ராணுவத்தின் மருத்துவ பிரிவை சேர்ந்த மேஜர் டாக்டர் ரோஹித் பச்வாலா 31, உடனே அந்த பெண்ணிற்கு ரயில்வே பிளாட்பாரத்தில் குழந்தை பிரசவிக்க உதவினார்.


மருத்து உபகரணங்கள் ஏதும் இல்லாத நிலையில், ஹேர் க்ளிப் மற்றும் பாக்கெட் கத்தியை பயன்படுத்தி அந்தப் பெண்ணின் பிரசவத்தை நல்லபடியாக செய்து முடித்தார். ராணுவ மருத்துவர் ரோஹித் பச்வாலாவின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.


இந்த நிலையில், ரயில்நிலையத்தில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு, குழந்தையை பிரசவிக்க உதவிய ராணுவ மருத்துவர் ரோஹித் பச்வாலாவுக்கு ராணுவ தளபதி உபேந்திரா திவேதி பாராட்டு தெரிவித்துள்ளார்.


மேலும், கடமைக்கு அப்பாற்பட்டு ரோஹித் பச்வாலா அர்ப்பணிப்புடன் இந்த செயலை செய்ததாகவும், ராணுவ சேவையின் உன்னதமான மதிப்புகளை இது வெளிப்படுத்தியுள்ளதாக அவர் கூறினார்.

Advertisement