சாலை விரிசலுக்கு காரணமான கட்டுமான நிறுவனம் மீது புகார்

வேளச்சேரி, வேளச்சேரியில், சாலை விரிசலுக்கு காரணமான கட்டுமான நிறுவனம் மீது, மாநகராட்சி சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

அடையாறு மண்டலம், 178வது வார்டு, சேஷாத்ரிபுரம் பிரதான சாலை, 300 மீட்டர் நீளம், 40 அடி அகலம் கொண்டது. வேளச்சேரியின் ஒரு பகுதி மக்கள், இந்த சாலை வழியாக பெருங்குடி, தரமணி ரயில் நிலையம் செல்கின்றனர்.

இந்த சாலையை ஒட்டியுள்ள, 3 ஏக்கர் தனியார் இடத்தில், 'ஐரா' என்ற நிறுவனம், அடுக்குமாடி கட்டடம் கட்டும் பணியை துவங்கியது. இதற்காக, தரைத்தளத்தில் இருந்து, 60அடி ஆழத்தில் பேஸ்மென்ட் போடும் பணி நடந்தது.

ராட்சத இயந்திரம் கொண்டு பள்ளம் எடுத்து, இடிக்கும் பணி நடக்கிறது. இதில் ஏற்பட்ட அதிர்வில், சேஷாத்ரிபுரம் பிரதான சாலையில், நேற்று முன்தினம் மாலை, சாலையின் பாதி அளவு விரிசல் விழுந்து சாய்வாக உள்வாங்கியது.

அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க, பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது. நேற்று மாலை, மாநகராட்சியின் தெற்கு வட்டார துணை கமிஷனர் அதாப் ரசூல், குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் வினய் உள்ளிட்ட அதிகாரிகள், சாலை மற்றும் கட்டுமான பணி இடத்தை ஆய்வு செய்தனர்.

சாலை விரிசலுக்கு காரணமான கட்டுமான நிறுவனம், பணியை தொடர்ந்து நடத்தி கொண்டிருந்தது. சாலையை சரி செய்து கொடுக்காமல் கட்டுமான பணியைத் தொடர்ந்த நிறுவன மேலாளர்களை, அதிகாரிகள் கடிந்து கொண்டனர்.

விரைவில் சாலையை சரி செய்து தர வேண்டும். சம்பவத்துக்கு காரணமான கட்டுமான நிறுவனம் மீது, போலீசில் புகார் அளிக்க வேண்டும் என, மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். இதையடுத்து, மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் பிரேமலதா, கட்டுமான நிறுவனம் மீது, வேளச்சேரி போலீசில் புகார் அளித்தார்.

Advertisement