கல்லுாரி மாணவி கடத்தல் 'கட்டாயப்படுத்திய' ஐவர் கைது

கோவை: கோவையில் கல்லுாரி மாணவியை கடத்திச் சென்று, ஹோட்டலில் அடைத்து வைத்து, திருமணம் செய்து கொள்ளுமாறு மிரட்டிய ஐந்து பேரை, போலீசார் கைது செய்தனர்.

துாத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது மாணவி, கோவையில் உள்ள தனியார் கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு படிக்கிறார்.

அம்மாணவி துாத்துக்குடியில் இருந்தபோது, துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த செல்வன், 22, என்ற வாலிபருடன் நட்பாக பழகினார். காதலிப்பதாக அந்த வாலிபர் கூறியதும், அவருடன் பேசுவதை மாணவி தவிர்த்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 7ம் தேதி அந்த மாணவி சவுரிபாளையம் பகுதியில் நின்றிருந்தபோது, தன் நண்பரான சாத்தான்குளத்தைச் சேர்ந்த லிவிங்ஸ்டன் சாமுவேல், 24, என்பவருடன் அங்கு வந்த செல்வன், திருமணம் செய்து கொள்ளுமாறு மாணவியை வற்புறுத்தினார்.

மாணவி மறுத்ததால், அவரை இழுத்து ஆட்டோவில் ஏற்றி, காந்திபுரம் பகுதியில் உள்ள ஒரு லாட்ஜுக்கு கடத்திச் சென்றார். அங்கு, செல்வனின் நண்பர்கள் மூவர் இணைந்தனர். ஐந்து பேரும், செல்வனை திருமணம் செய்துகொள்ள மாணவியை கட்டாயப்படுத்தினர்.

ஒரு கட்டத்தில் அங்கிருந்து தப்பிய மாணவி, பீளமேடு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து, துாத்துக்குடியைச் சேர்ந்த செல்வன், 22, லிவிங்ஸ்டன் சாமுவேல், 24, துரைசாமி, 27, மணிகண்டன், 23, மற்றும் ரஞ்சித்குமார், 26, ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில், லிவிங்ஸ்டன் சாமுவேல் மீது, துாத்துக்குடி மாவட்டத்தில் ஒன்பது வழக்குகள் மற்றும் துரைசாமி மீது, ஆறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

Advertisement