தொழிற்சங்கங்களுக்கு ஆதரவு; ஜாக்டோ - ஜியோ பங்கேற்பு

கோவை; தொழிற்சங்கங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், அகில இந்திய அளவில் நடைபெற்ற ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில், முதல் முறையாக ஜாக்டோ - ஜியோ பங்கேற்றது.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை, மீண்டும் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்டபல்வேறு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ - ஜியோ உறுப்பினர்கள் நேற்று (ஜூலை 9) ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

கோவை தெற்கு வட்டாசியர் அலுவலகம் முன்பு, காலை 11:00 மணியளவில் தொடங்கிய ஆர்ப்பாட்டத்தில், சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், கிராமப்புற செவிலியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், வருவாய் மற்றும் ஊரக வளர்ச்சி துறை ஊழியர்கள் உள்ளிட்ட, 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவாக, பெரும்பாலான ஆசிரியர்கள் ஒருநாள் விடுப்பு எடுத்து ஆதரவு தெரிவித்தனர். ஜாக்டோ - ஜியோ கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அரசு, பொதுச் செயலாளர்ராஜசேகர் மற்றும் சங்கத்தின் மாவட்ட நிதி கண்காணிப்பாளர் அருளானந்தம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Advertisement