மடப்புரம் அஜித்குமார் கொலை 6 பேருக்கு சி.பி.ஐ., சம்மன் இன்று விசாரணைக்கு ஆஜராக உத்தரவு

திருப்புவனம்:சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் தனியார் நிறுவன காவலாளி அஜித்குமார் ஜூன் 28ல் நகை திருட்டு வழக்கு விசாரணையின் போது போலீசார் தாக்கியதில் இறந்தார். இக்கொலை வழக்கு குறித்து ஜூலை 12 முதல் சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

நேற்று மாலை 3:30 மணிக்கு மடப்புரம் வந்த சி.பி.ஐ.,யினர் கோயில் ஊழியர்கள் கார்த்திக்வேலு, பிரவீன் குமார், அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமார், ஆட்டோ டிரைவர் அருண், அஜித்குமாரின் நண்பர் வினோத் ஆகியோர் இன்று (ஜூலை 18) காலை மதுரை சி.பி.ஐ., அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் வழங்கினர். பிறகு திருப்புவனம் போலீஸ் ஸ்டேஷனில் சி.சி.டி.வி., கேமராக்கள், அவற்றின் பதிவுகள், நிகிதாவிடம் புகார் பெற்ற இடம் உள்ளிட்டவை குறித்து விசாரணை செய்தனர். ஜூன் 27 ல் விசாரணைக்கு அஜித்குமாரை போலீசார் அழைத்து சென்ற பகுதிசி.சி.டி.வி., கேமரா பதிவுகளையும் அவர்கள் சேகரித்தனர். மேலும் மதுரை சிறையில் உள்ள தனிப்படை போலீஸ்காரர் ராஜா வீட்டிற்கு சென்ற சி.பி.ஐ.,யினர் அவரும் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் வழங்கி சென்றனர்.

பரிதவிக்க விட்ட மின் வாரியம்@

@

நேற்று மதியம் 3:30 மணிக்கு ஆறு சி.பி.ஐ., அதிகாரிகள் திருப்புவனம் ஸ்டேஷனில் விசாரணையில் ஈடுபட்டனர். நேற்று மின் வாரியம் காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிக்காக மின்சப்ளையை நிறுத்தியிருந்தது. எனவே சி.பி.ஐ.,யினர் மாலை 5:00 மணிக்கு பின் ஸ்டேஷன் சிசி.டிவி., பதிவுகளை ஆய்வு செய்யலாம் என தொழில் நுட்ப குழுவினருடன் காத்திருந்தினர். ஆனால் இரவு 7:45 மணி வரை மின்சாரம் வழங்கப்படவில்லை. இதனால் சி.பி.ஐ.,யினர் டென்ஷனாயினர். மின்வாரிய அதிகாரிகளும் அலைபேசிகளை சுவிட்ச் ஆப் செய்ததால் தொடர்பு கொள்ள முடியவில்லை. ஒரு வழியாக நேற்றிரவு 7:50 மணிக்கு மின் சப்ளை வரவும் சி.பி.ஐ.,யினர் ஆய்வை துவங்கினர். நேற்றிரவு 9:00 மணிக்கு பிறகும் அவர்கள் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டனர்.

Advertisement