12 மாவட்டங்களில் இன்று கனமழை; வானிலை மையம் எச்சரிக்கை

1

சென்னை:'வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, கோவை, நீலகிரி, சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


அதன் அறிக்கை: நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில், 12 செ.மீ., மழை பெய்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக, கோவை மாவட்டம் சின்னக்கல்லார், 11; திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி, 9; கோவை மாவட்டம் சின்கோனா, நீலகிரி மாவட்டம் நடுவட்டம் போன்ற இடங்களில் தலா, 8 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.


தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்கள் மீது, ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அத்துடன் மேற்கு திசை காற்று வீசுவதிலும், வேக மாறுபாடு காணப்படுகிறது. தமிழகத்தில் ஒருசில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில், இன்று இடி, மின்னல் மற்றும் மணிக்கு, 50 கி.மீ., வேகத்தில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.


@twitter@https://x.com/dinamalarweb/status/1946004676077572324twitter
கோவை, நீலகிரி மாவட்ட மலைப் பகுதிகளில் சில இடங்களில், இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தேனி, தென்காசி, செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், வேலுார், விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில், சில இடங்களில் இன்று கனமழை பெய்யலாம்.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். சில இடங்களில், இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement