விமான விபத்து செய்தி வெளியிட விதிமுறை வகுக்க கோரி வழக்கு

சென்னை:விமான விபத்து தொடர்பான செய்திகளை வெளியிட, உரிய வழிகாட்டு விதிமுறைகளை வகுக்க, மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கோவையை சேர்ந்த பிரவீன் என்பவர் தாக்கல் செய்த மனு:

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில், ஜூன் 12ம் தேதி, லண்டனுக்கு புறப்பட்ட, 'ஏர் இந்தியா' விமானம் விபத்துக்கு உள்ளானது; 241 பேர் உயிரிழந்தனர். விமானம் விழுந்த மருத்துவ வளாகத்தில் இருந்த, 19 பேர் இறந்தனர்.

இந்த விமான விபத்திற்கு, 'பைலட்' தான் காரணம் என பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், சமூக வலைதளங்களில் செய்திகள் வந்தன. அந்த விமானத்தை ஓட்டிய பைலட்டும் விபத்தில் பலியானார். அவர் தான் தவறு செய்தார் என, ஊடகங்களுக்கு எப்படி தெரியும்?

உரிய விசாரணை எதுவும் செய்யாமல் செய்திகளை வெளியிட்டு, பைலட் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது களங்கத்தை ஏற்படுத்தி காயப்படுத்துகின்றனர். இதேபோல பல விமான விபத்துகளிலும் உண்மையை ஆராயாமல் செய்திகள் வெளிவந்துள்ளன.

எனவே, விமான விபத்துக்கள் தொடர்பான உண்மையை ஆய்வு செய்து, ஊடகங்கள் செய்திகளை வெளியிட, வழிகாட்டு விதிமுறைகளை வகுக்க கோரி, மத்திய விமான போக்குவரத்து துறை செயலருக்கு, ஜூலை 14ம் தேதி மனு அனுப்பினேன். அந்த மனுவை பரிசீலித்து ஊடகங்கள் செய்தி வெளியிடுவது குறித்த வழிகாட்டு விதிகளை வகுக்க, மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

Advertisement