த.வெ.க., கொடியில் உள்ள வர்ணத்தை பயன்படுத்த தடை கோரி வழக்கு நடிகர் விஜய்க்கு 'நோட்டீஸ்'

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் சிவப்பு, மஞ்சள் வர்ணங்களை பயன்படுத்த தடை கோரிய மனுவுக்கு, நடிகர் விஜய் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை அறங்காவலர் பச்சையப்பன் தாக்கல் செய்த மனு:

கிராமணி மக்கள் வாழ்வுரிமை நலச் சங்கம் என்ற பெயரில் தன்னார்வ தொண்டு நிறுவனம் துவக்கப்பட்டது.

பின், தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை என்ற பெயரில் அறக்கட்டளையாக மாற்றப்பட்டது.

சிவப்பு, மஞ்சள், சிவப்பு நிறத்தில், இந்த அறக்கட்டளைக்கு கொடி உருவாக்க திட்டமிடப்பட்டது. அதையடுத்து, தமிழக அரசின் பதிவுத் துறையில் சபையின் வர்த்தக முத்திரையாக, 2023ம் ஆண்டு நவம்பர் 28ல் பதிவு செய்யப்பட்டு, சான்றிதழ் பெறப்பட்டு உள்ளது.

தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை மட்டுமே, இந்த வணிக முத்திரையை பயன்படுத்த உரிமை உள்ளது. வேறு எந்த நபர்களும், கொடியை அனுமதியின்றி பயன்படுத்த முடியாது.

வணிக முத்திரை சட்ட விதிகளை மீறி, சபையின் கொடியில் இடம்பெற்ற நிறங்களில், நடிகர் விஜயின் த.வெ.க., கொடி உருவாக்கப்பட்டு உள்ளது. அதற்கு தடை விதிக்க வேண்டும்; இழப்பீடாக 5 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன், விசாரணைக்கு வந்தது.

அப்போது, 'வணிக முத்திரை என்பது சரக்குகளுக்கு தானே பொருந்தும்; எப்படி அரசியல் கட்சியின் கொடிக்கு பொருந்தும்?' என, நீதிபதி கேள்வி எழுப்பினார்.

அதற்கு மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் ரமேஷ் கணபதி, ''சரக்கு மட்டுமல்லாமல் சேவைக்கும் பொருந்தும். தொண்டு நிறுவனங்கள், அறக்கட்டளைகளுக்கு வணிக முத்திரை சட்டம் பொருந்தும்,'' என விளக்கம் அளித்தார்.

இதையடுத்து, இந்த மனுவுக்கு இரண்டு வாரங்களில், தமிழக வெற்றிக் கழகம் மற்றும் அந்த கட்சியின் தலைவர் விஜய் ஆகியோர் பதிலளிக்க, 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்டார்.

Advertisement