மாநகராட்சி அதிகாரிக்கு மிரட்டல் சுகாதார பணியாளர் 3 பேர் கைது

மதுரை: மதுரையில் மாநகராட்சி துாய்மைப் பணியாளர்களை பணிக்கு செல்லவிடாமல் தடுத்து அதிகாரியை மிரட்டியது தொடர்பாக சுகாதார பணியாளர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

மதுரையில் மாநகராட்சியை கண்டித்து ஜூலை 1ல் மைய அலுவலகத்தில் துாய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அன்று வார்டுகளில் பணிக்கு செல்ல விரும்பிய பணியாளர்களை சிலர் தடுத்து போராட்டத்தில் பங்கேற்க கட்டாயப்படுத்தினர்.

மாநகராட்சி நீச்சல்குளம் வார்டு ஆபீசில் போராட்டத்திற்கு தயாரான பணியாளர்களை 'போராட்டத்தில் பங்கேற்றால் வருகை பதிவேட்டில் கையெழுத்திட வேண்டாம்' என சுகாதார ஆய்வாளர் முருகையா தெரிவித்தார். அப்போது பணியாளர்களை போராட்டத்திற்கு அழைக்க சென்றிருந்த சங்க நிர்வாகிகள் பூமிநாதன், முத்து, பாலசுப்ரமணியன் ஆகியோர் முருகையாவை தகாத வார்த்தையில் பேசி, கொலை மிரட்டல் விடுத்தனர்.

அண்ணாநகர் போலீசில் அவர்கள் 3 பேர் மீதும் முருகையா புகார் அளித்தார். புகார் மீது நடவடிக்கை எடுக்க துப்புரவு ஆய்வாளர்கள் அலுவலர்கள் சங்கம் வலியுறுத்தியது. போலீசார் வழக்குப் பதிந்து, அவர்களை கைது செய்து ஜாமினில் விடுவித்தனர்.

Advertisement