பழுதாகி பரிதவிக்கும் பிரிட்டீஷ் போர் விமானத்திற்கு ஒரு நாளைக்கு பார்க்கிங் கட்டணம் ரூ.26,261

7

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் விமான நிலையத்தில் பழுதாகி நிற்கும், பிரிட்டீஷ் போர் விமானத்திற்கு, ஒரு நாளைக்கு ரூ.26,261 பார்க்கிங் கட்டணமாக செலுத்த வேண்டியுள்ளது.


பிரிட்டீஷ் கடற்படையின் எப் 35 பி போர் விமானம் ஜூன் 14ம் தேதி திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அவசரமாக தரை இறங்கியது. எரிபொருள் பிரச்னையால் தரை இறங்கிய விமானம் பழுதாகி நின்றுவிட்டது. இதனை மீண்டும் பறக்க வைக்க தொழில்நுட்ப நிபுணர்கள் நீண்ட நேரம் போராடியும் முயற்சி கை கொடுக்கவில்ல. இந்த போர் விமானம் கேலி, கிண்டலுக்கு ஆளானது. இது பிரிட்டீஷ் அரசிற்கு அவமானமாக கருதப்பட்டது.


விமானத்தின் பழுது சரி செய்வதற்காக, பிரிட்டீஷ் விமானப்படை பொறியாளர்கள் 24 பேர் கொண்ட குழு, திருவனந்தபுரம் வந்துள்ளது. அவர்கள் சரி செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். முக்கிய கோளாறுகள் சரி செய்யப்பட்டு விட்டன. போர் விமானம் ஜூலை 23ம் தேதி தாய் நாட்டுக்கு கொண்டு செல்லப்படும் என பிரிட்டீஷ் உயர் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.


ஆனாலும் அடுத்த பிரச்னை பிரிட்டீஷ் அதிகாரிகளுக்கு, தலைக்கு மேல் இருக்கிறது.
ஏனென்றால், கடந்த ஜூன் 14ம் தேதியில் இருந்து திருவனந்தபுரம் விமான நிலையத்தில் நிறுத்தி வைத்ததற்காக பார்க்கிங் கட்டணம் செலுத்த வேண்டும். நாள் ஒன்றுக்கு ரூ.26,261 வாடகை கட்டணம் வீதம், 33 நாள்களுக்கு ரூ.8.6 லட்சம் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது.


இந்த தொகையை பிரிட்டீஷ் அதிகாரிகள் விரைவில் செலுத்துவார்கள் என வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. உலகின் மிக காஸ்ட்லியான, அதிநவீன போர் விமானமாக கருதப்படும் இந்த விமானத்தின் இந்திய ரூபாய் மதிப்பு ரூ.640 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement