பள்ளி மாணவன் விஷமருந்தி தற்கொலை உறவினர்கள் மறியல்; வேனுக்கு தீ வைப்பு

திருநெல்வேலி:ஆசிரியர் கண்டித்ததால், பள்ளி மாணவன் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார். இதனால் கிராமத்தினர் மறியல் செய்தனர். நள்ளிரவில், பள்ளி வளாகத்தில் நிறுத்தியிருந்த வேன்கள் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசியதில், அவை தீக்கிரையாகின.

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லுாரில் உள்ள செயின்ட் ஜான்ஸ் பள்ளியில் மானாபரநல்லுாரை சேர்ந்த சங்கரகுமார் மகன் சபரி கண்ணன், 15, பத்தாம் வகுப்பு படித்தார். ஜூலை 4ல் பள்ளியில் நடந்த சம்பவம் தொடர்பாக மாணவர்களை, ஆசிரியர்கள் கண்டித்தனர்.

மீண்டும், ஜூலை 7ல் பள்ளிக்கு வரும்போது, சபரிகண்ணனை, பெற்றோரை அழைத்து வரும்படி ஆசிரியர் தெரிவித்தார்.

இதை பெற்றோரிடம் தெரிவிக்காத மாணவன், பூச்சிக்கொல்லி மருந்து பாட்டிலோடு வந்து, அன்று காலை பள்ளி வளாகம் அருகில் குடித்தார். மயக்கமுற்ற மாணவனை, ஆசிரியர்கள் மீட்டு சேரன்மாதேவி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பின், திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, நேற்று முன்தினம் அவர் இறந்தார்.

மாணவன் இறப்புக்கு காரணமான ஆசிரியர்கள் மீது நடவடிக்கை கோரி, மாணவன் உடல் வந்த ஆம்புலன்ஸ் வேனை நேற்று முன்தினம் இரவு மறித்து, உறவினர்கள் மறியல் செய்தனர்.

இதனால், வீரவநல்லுாரில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் பேச்சு நடத்திய பின், அவர்கள் கலைந்தனர். பின், மாணவன் உடல் தகனம் செய்யப்பட்டது.

Tamil News
Tamil News
Tamil News

இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவில், பள்ளி வேன்கள் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு களை வீசியதில், இரு வேன்கள் தீக்கிரையாகின. போலீசார் குவிக்கப்பட்டனர். நேற்று பள்ளிக்கு விடு முறை அறிவிக்கப்பட்டது.

டி.எஸ்.பி., சத்தியமூர்த்தி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மாணவன் இறப்பிற்கு ஒரு வழக்கு, மறியலில் ஈடுபட்ட மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் 14 பேர் உள்ளிட்டோர் மீது ஒரு வழக்கு, பள்ளி நிர்வாகம் புகாரில் பள்ளி வேன்கள் தீ வைக்கப்பட்ட சம்பவத்திற்கு ஒரு வழக்கு என, போலீசார் மூன்று வழக்குகளை பதிவு செய்தனர்.

பள்ளி வேனை பெட்ரோல் குண்டு வீசி எரித்ததாக, ஹரிகரன், 18, என்பவர் கைது செய்யப்பட்டார். மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement