50 வந்தே பாரத் ரயில் பெட்டிகள் ஐ.சி.எப்., தயாரிக்க உள்ளதாக தகவல்

சென்னை: 'சென்னை பெரம்பூரில் உள்ள, ஐ.சி.எப்., எனப்படும், ஒருங்கிணைந்த ரயில் பெட்டிகள் தயாரிப்பு தொழிற்சாலையில், வரும் 2027ம் ஆண்டில், 50 வந்தே பாரத் ரயில்களுக்கான, 1,200 துாங்கும் வசதியுடைய பெட்டிகள் தயாரிக்கப்பட உள்ளன' என, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

பெரம்பூர் ஐ.சி.எப்., தொ ழிற்சாலையில், வந்தே பாரத் ரயில் திட்டத்தில், 88 ரயில்களுக்கான பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

மேலும், துாங்கும் வசதியுடைய ஒன்பது ரயில்களுக்கான பெட்டிகள், தயாரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. ஒரு வந்தே பாரத் ரயிலுக்கு, துாங்கும் வசதியுள்ள பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

ஜம்மு - காஷ்மீருக்கு அங்குள்ள சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப, பயணியர் பயணிக்கும் வசதியுடன், இரண்டு ரயில்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

இது தவிர, 24 பெட்டிகள் கொண்ட 50 வந்தே பாரத் ரயில்களுக்கு, 1,200 பெட்டிகள் தயாரிக்கும் பணி, வரும் 2027ல் துவக்கப்பட உள்ளது. ஒவ் வொரு வந்தே பாரத் துாங்கும் வசதி பெட்டி உடைய ரயிலும், தலா 120 கோடி ரூபாயில் தயாராக உள்ளது.

தெற்கு ரயில்வேயில், பயணியர் ரயில் பெட்டிகள் அனைத்தையும், மெமு ரயில் பெட்டிகளாக்கும் திட்டம், ஓரிரு ஆண்டுகளில் முழுமையாக அனைத்து கோட்டங்களிலும் செயல்படுத்தப்பட உள்ளது.

இது குறித்து, ஐ.சி.எப்., முதன்மை மக்கள் தொடர்பு அலுவலர் ஆர்.செந்தில்குமார் கூறுகையில், ''வந்தே பாரத் ரயில்களுக்கான பெட்டிகள், அதிக அளவில் சென்னை ஐ.சி.எப்.,பில் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

''வரும் 2027ம் ஆண்டுக்குள், 10 ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு இயக்கப்படும். அதன்பின் 1,200 பெட்டிகள் தயாரிக்கும் பணிகள் துவக்கப்படும்,'' என்றார்.

Advertisement