கன்வார் யாத்திரையில் ஜவான் கொலை: ஹரியானாவில் 3 பேர் கைது

சண்டிகர்: கன்வார் யாத்திரையில் சிஆர்பிஎப் ஜவான் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் ஹரியானா போலீசார் 3 பேரை கைது செய்தனர்.

ஹரியானாவின் சோனிபட்டில் சிஆர்பிஎப் எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த கிருஷ்ணகுமாரின் வீடு உள்ளது. கடந்த ஜூலை 28 அன்று அவரது வீட்டிற்கு வெளியே சிலரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவம் ஹரித்வாரில் கன்வார் யாத்திரை நடைபெற்றபோது தனது கிராமத்தை சேர்ந்த சிலருடன் கிருஷ்ணகுமார், தகராறில் ஈடு்பட்ட சில தினங்களுக்கு பிறகு நடந்திருக்கிறது. கிருஷ்ணகுமார் சுட்டுகொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக 3 பேர் இன்று கைதாகி உள்ளனர். துப்பாக்கிச்சூட்டுக்குப் பின்னணியில் இருந்த இரண்டு முக்கிய சந்தேக நபர்களான நிஷாந்த் மற்றும் அஜய் இன்னும் தலைமறைவாக உள்ளார். அவர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

இது குறித்து போலீஸ் அதிகாரி லால் சிங் கூறியதாவது:

சுட்டுக்கொல்லப்பட்ட ஜவான் கிருஷ்ணகுமார் 30, விடுப்பில் இருந்தார்.
அப்போதுதான் இந்த சம்பவம் நடந்திருக்கிறது.

கிருஷ்ணனைத் தவிர, குற்றம் சாட்டப்பட்டவர் ஆனந்த் என்ற பஹியா என்ற மற்றொரு நபரைக் கொல்லத் திட்டமிடப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கொலை வழக்கில் நிஷாந்த் மற்றும் அஜய் ஆகியோர் முக்கிய குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

கன்வாருக்குச் செல்வதற்கு முன்பு, அஜய் தனது உரிமம் இல்லாத துப்பாக்கியை மோஹித் என்ற நபரிடம் விட்டுச் சென்றிருந்தார். அஜய் என்ற பிரவீன் என்ற மெந்தக்கும் இதில் ஈடுபட்டிருந்தார்.

சாகர் என்ற நபருக்குச் சொந்தமான கார் இந்தக் கொலையில் பயன்படுத்தப்பட்டது. அஜய் மற்றும் நிஷாந்த் ஆகியோர் சாகரின் காரில் கேரி தம்கன் கிராமத்திற்குச் சென்றனர். அஜய் மற்றும் நிஷாந்த் ஆகியோர் கிருஷ்ணாவை சுட்டுக் கொன்றுவிட்டு சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

கார் ஓட்டுநர் சாகர், பிரவீன் என்ற மெந்தக் மற்றும் மோஹித் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். முக்கிய குற்றவாளிகளான நிஷாந்த் மற்றும் அஜய் இன்னும் தலைமறைவாக உள்ளனர்.

முக்கிய குற்றவாளிகளைக் கைது செய்ய சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஒரு நாள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு லால் சிங் கூறினார்.

Advertisement