அமெரிக்காவை வழிநடத்திக் கொண்டு இருப்பது இந்தியர்கள் தான்; அண்ணாமலை

15

சென்னை: "அமெரிக்காவை வழிநடத்திக் கொண்டு இருப்பது இந்தியர்கள் தான்" என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை பேசினார்.



சென்னை ஐஐடியில் நடந்த நிகழ்ச்சியில் அண்ணாமலை பேசியதாவது: பத்து நாட்களுக்கு முன்பு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஏ.ஐ., மாநாட்டில் பேசினார். எத்தனை பேர் கேட்டீர்கள் என்று தெரியவில்லை. இந்த நிகழ்ச்சியில், கூகுள், மெட்டா, மைக்ரோசாப்ட் உள்ளிட்ட முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் கலந்து கொண்டனர். மூன்று விஷயங்களை டிரம்ப் முன் வைத்தார்.

தேசப்பக்தர்




சீனாவில் பொருட்களைத் தயாரிக்கக் கூடாது, வேலைவாய்ப்பில், முக்கியப் பொறுப்புகளில் இந்தியர்களுக்கு முன்னுரிமை வழங்கக் கூடாது, அமெரிக்காவில்தான் முதலீடு செய்ய வேண்டும்.

இந்த மூன்று விஷயங்களை செய்தால் தான், உங்களை தேசப்பக்தர் அமெரிக்கர் ஆக நான் பார்ப்பேன். என்னை பொறுத்தவரை இந்த மூன்று விஷயங்களை இந்தியாவிற்கு ஒரு வரமாக நான் பார்க்கிறேன். அமெரிக்காவை வழிநடத்திக் கொண்டு இருப்பது இந்தியர்கள் தான்.

மூளையும், திறமையும்...!




இதில் நகைச்சுவை என்னவென்றால் அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னணி நிறுவனங்களின் முக்கிய அதிகாரிகளில் 70% இந்தியர்கள்தான். அவர்கள் முன்பே, இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு, முக்கிய பொறுப்புகள் வழங்கக் கூடாது என்று பேசியிருக்கிறார் டிரம்ப். அதுதான் நம் இந்திய நாட்டின் பலம்.


இந்தியர்களின் மூளையும், திறமையும் அவ்வளவு மதிப்புமிக்கது. இன்றைக்கு மாணவர்கள், இளைஞர்கள் விவசாயம் செய்ய வேண்டும் என்று நினைத்தால் முதலில் அவர்களுக்கு நிலம் இருக்க வேண்டும். ஒரு ஏக்கர் வைத்துக்கூட விவசாயம் செய்யமுடியும். அதற்கு நல்ல பயிற்சி வேண்டும். இவ்வாறு அண்ணாமலை பேசினார்.

Advertisement