இந்தியா திணறல் துவக்கம்

பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய பெண்கள் 'ஏ' அணி, ஆஸ்திரேலியா 'ஏ' அணியுடன் அதிகாரப்பூர்வமற்ற 4 நாள் கொண்ட டெஸ்டில் பங்கேற்கிறது. 'டாஸ்' வென்ற ஆஸ்திரேலியா பீல்டிங் தேர்வு செய்தது.
இந்திய அணிக்கு ஷைபாலி, நந்தினி ஜோடி துவக்கம் கொடுத்தது. ஜார்ஜியா வீசிய போட்டியின் 2வது ஓவரின் 5வது பந்தில் நந்தினி 'டக்' அவுட்டானார். அடுத்து தந்த தாரா, முதல் பந்தில் 'டக்' அவுட்டாக, இந்தியா 6 ரன்/2 விக்கெட் என திணறியது. மைத்லன் ஓவரில் ஷைபாலி, தேஜல் தலா ஒரு பவுண்டரி அடித்தனர். ஜார்ஜியா வீசிய 6வது, மைத்லன் வீசிய 9வது ஓவர்களில் ஷைபாலி, தொடர்ந்து இரு பவுண்டரி அடித்து நம்பிக்கை தந்தார்.
மறுபக்கம் தேஜல் (9), சியான்னா பந்தில் அவுட்டானார். 38 பந்தில் 35 ரன் எடுத்த ஷைபாலி, ஜார்ஜியா பந்தில் போல்டானார். இந்திய அணி 54/4 ரன் என திணறியது. பின் மழை காரணமாக போட்டி நிறுத்தப்பட்டது. மீண்டும் போட்டி துவங்கியதும் தனுஸ்ரீ (13) அவுட்டானார்.
மழையால் பாதிக்கப்பட்ட நேற்று முதல் நாளில் 23.2 ஓவர் மட்டும் வீசப்பட்டன. இந்திய பெண்கள் 'ஏ' அணி முதல் இன்னிங்சில் 93/5 ரன் எடுத்திருந்தது. ராகவி (26), கேப்டன் ராதா (8) அவுட்டாகாமல் இருந்தனர்.

Advertisement