160 பயணிகளுடன் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் இன்ஜின் கோளாறு: விமானி விடுத்த எச்சரிக்கையால் பரபரப்பு

3


புதுடில்லி: 160 பயணிகளுடன் டில்லியில் இருந்து இந்தூர் நோக்கி சென்ற விமானத்தில் இன்ஜின் கோளாறு ஏற்பட்டது. இதனை கண்டுபிடித்த விமானி எச்சரித்ததை தொடர்ந்து இந்தூரில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.


ஏர் இந்தியா நிறுவனத்தில் ஒரு அங்கமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று 161 பயணிகளுடன் டில்லியில் இருந்து மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகருக்கு இன்று ( செப்.,05) காலை கிளம்பியது. விமானம் இந்தூர் நகரை நெருங்கும் நேரத்தில் இன்ஜினில் தொழில்நுட்ப கோளாறு இருந்ததை கண்டுபிடித்தார். இன்ஜின் ஒன்றில் 'ஆயில் பில்டரில்' பிரச்னை இருந்ததாக தெரிகிறது.


இதனையடுத்து விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கு 'Pan - Pan' எச்சரிக்கையை ( உயிருக்கு அச்சுறுத்தல் இல்லாத வகையில் ஏற்படும் அவசர காலத்தில் விடுக்கப்படும் எச்சரிக்கை ஆகும்) விமானி விடுத்தார். தொடர்ந்து, வழக்கமான முறைப்படி விமான நிலையத்தில் தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டன.


தொழில்நுட்ப கோளாறால் காலை 9:35 மணிக்கு இந்தூரில் தரையிறங்க வேண்டிய விமானம் தாமதமாக 9:55 மணிக்கு பத்திரமாக தரையிறங்கியது. விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் நலமுடன் உள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement