'பார்க்கிங்' ஏரியாவாக மாறிய நிழற்குடை: பயணியர் தவிப்பு

சித்தாலப்பாக்கம்: சித்தாலப்பாக்கம் பேருந்து நிழற்குடை வாகன நிறுத்துமிடமாக மாறியுள்ளதால், பயணியர் தவித்து வருகின்றனர்.

பரங்கிமலை ஊராட்சி ஒன்றியம், சித்தாலப்பாக்கம் ஊராட்சி பஞ்சாயத்து அலுவலகம் அருகில், சித்தாலப்பாக்கம்- காரணை பிரதான சாலை வளைவில் பயணியர் நிழற்குடை அமைந்துள்ளது.

சுவர் இல்லாமல் அமைக்கப்பட்டுள்ளதால், மழைக்காலங்களில் பயணியர் இதை பயன்படுத்த இயலாத நிலை உள்ளது.

இந்த பேருந்து பயணியர் நிழற்குடை, சாலையின் வளைவில் அமைந்துள்ளதால், அரசு பேருந்துகள் வளைவில் நிறுத்தி பயணிரை ஏற்றும்போது, அங்கு நெரிசல் அதிகரிக்கிறது.

அதுமட்டுமல்லாமல், கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள், நிழற்குடையின் உள்ளும், வெளியும் வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர்.

இதனால், காத்திருக்கும் பயணியர் மற்றும் பேருந்தில் ஏறி இறங்கும் பயணியர் என, அனைவரும் மிகுந்த சிரமப்படுகின்றனர்.

எனவே, பழமையான நிழற்குடையை அகற்றி, வளைவிற்கு முன்னரே பயன்பாடின்றி கிடக்கும் பழைய பஞ்சாயத்து அலுவலகத்தில், நிழற்குடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement