ஹமாஸ் அமைப்புக்கு இறுதி எச்சரிக்கை: இனி எச்சரிக்கை கிடையாது என்கிறார் டிரம்ப்

8

வாஷிங்டன்: பணயக்கைதிகள் விவகாரத்தில் ஹமாஸ் அமைப்பினருக்கு, அமெரிக்க அதிபர் டிரம்ப் இறுதி எச்சரிக்கையை விடுத்துள்ளார்.



இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசாவில் இயங்கி வரும் ஹமாஸ் இயக்கத்தினருக்கும் இடையேயான சண்டை 2 ஆண்டுகளை கடந்தும் நீடித்து வருகிறது. இஸ்ரேல் தாக்குதலில் கிட்டத்தட்ட 65,000க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.


மோதலை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சித்து வருகிறார். அதற்காக அவர் பலமுறை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார்.


48 பணயக்கைதிகளை ஹமாஸ் சிறைபிடித்து வைத்துள்ள நிலையில், அந்த அமைப்பினருக்கு டிரம்ப் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் ட்ரூத் சோஷியல் பதிவில் குறிப்பிட்டு உள்ளதாவது;


பணயக்கைதிகள் வீடு திரும்ப வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். போர் முடிவுக்கு வர வேண்டும். இஸ்ரேல் நான் சொன்ன நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டு இருக்கிறது.


ஹமாசும் ஏற்றுக் கொள்ள வேண்டிய தருணம் வந்துவிட்டது. இது கடைசி எச்சரிக்கை. இதன் பிறகு எந்த ஒரு எச்சரிக்கையும் இருக்காது.


இவ்வாறு டிரம்ப் அந்த பதிவில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


டிரம்பின் எச்சரிக்கையை அறிந்த ஹமாசும் ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது. அதில், இது போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான தெளிவான அறிவிப்பு. அனைத்து கைதிகளையும் விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தைக்கு மீண்டும் தயாராக இருக்கிறோம் என்று கூறியுள்ளது.

Advertisement