நேபாளத்தில் அரசுக்கு எதிராக இளைஞர்கள் போராட்டம்: 20 பேர் உயிரிழப்பு

காத்மண்டு: நேபாளத்தில் சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து அரசை எதிர்த்து இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். 350க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதனையடுத்து சமூக வலைதளங்கள் மீதான உத்தரவை திரும்ப பெற அந்நாடு அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. மேலும் அந்நாட்டு உள்துறை அமைச்சர் ரமேஷ் லேகாக் பதவி விலகினார்.
நம் அண்டை நாடான நேபாளத்தில் ஆன்லைன் தளங்களை ஒழுங்குபடுத்தவும், தேவையற்ற உள்ளீடுகளை கண்காணிக்கவும் அந்நாட்டு உச்சநீதிமன்ற உத்தரவுப்படி புதிய விதிமுறைகளை அரசு வெளியிட்டு இருந்தது. இதன்படி சம்பந்தப்பட்ட சமூக வலைதளங்களை பதிவு செய்ய அந்நாட்டு அரசு ஏழு நாள் அவகாசம் வழங்கியிருந்தது. அவகாசம் முடிவடைந்தும், பேஸ்புக், வாட்ஸாப், இன்ஸ்டாகிராம், யு டியூப், எக்ஸ், லிங்க்டுஇன் உள்ளிட்ட நிறுவனங்கள் பதிவு செய்யவில்லை.
தடை
இதையடுத்து இவற்றை முடக்கி, நேபாளத்தின் தொலைத்தொடர்பு ஆணையத்துக்கு அந்நாட்டு தொலைத்தொடர்பு துறை அமைச்சகம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து அவை முடக்கப்பட்டுள்ளன. செய்தி, பொழுது போக்கு மற்றும் வர்த்தகம் ஆகிய காரணங்களுக்காக பயனர்கள் பெரிதும் சார்ந்து இருந்த இன்ஸ்டாகிராம் மற்றும் ஸ்நாப்சாட் ஆகியவையும் முடக்கப்பட்டன.
ஊரடங்கு
இருப்பினும் தடையை மீறி போராட்டம் நடைபெற்று வருகிறது. பார்லிமென்டில் தடை செய்யப்பட்ட பகுதிகளிலும் போராட்டக்காரர்கள் புகுந்தனர். பாதுகாப்புக்காக போலீசாருடன் ராணுவத்தினரும் ஈடுபடுத்தப்பட்டனர். பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. அதற்கு எந்த பலனும் ஏற்பட்டதாக தெரியவில்லை. மரக்கட்டைகளையும், தண்ணீர் பாட்டீல்களையும் போலீசார் மீது வீசியதுடன், அரசுக்கு எதிராக கோஷம் போட்டனர்.
காயம்
போராட்டத்தை கலைக்க ரப்பர் வெடிகுண்டு, கண்ணீர் புகை குண்டுகளை, தண்ணீரை பீய்ச்சி அடித்தும் பாதுகாப்பு படையினர் அவர்களை விரட்ட முயன்றனர். தடியடியும் நடத்தினர். இந்த மோதலில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். 350க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.



















ராஜினாமா
போராட்டம் காரணமாக நாடு முழுவதும் பதற்றமான சூழ்நிலை காணப்படுவதால், பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை திரும்ப பெற்றுக் கொள்ளவும் அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. பிரச்னைக்கு தார்மீக பொறுப்பு ஏற்று அந்நாட்டு உள்துறை அமைச்சர் ரமேஷ் லேகாக் பதவி விலகினார்.








