மிலாடி நபி ஊர்வலத்தில் பாக்., ஆதரவு கோஷம்; முஸ்லிமாக பிறக்க காங்., - எம்.எல்.ஏ., ஆசை

1

ஷிவமொக்கா : பத்ராவதியில் மிலாடி நபி ஊர்வலத்தின்போது, இரண்டு இடங்களில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பப்பட்டது. இதை கண்டித்து சாலையில் டயர்களை எரித்து, ஹிந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அடுத்த ஜென்மத்தில் முஸ்லிமாக பிறக்க ஆசைப்படுவதாக, பத்ராவதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., சங்கமேஸ்வர் கூறியதற்கு, பா.ஜ., தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


கர்நாடக மாநிலம், ஷிவமொக்காவின் பத்ராவதி டவுனில் மிலாடி நபியையொட்டி, நேற்று முன்தினம் இரவு முஸ்லிம்கள் பேரணியாக சென்றனர். காந்தி சதுக்கம் பகுதியில் ஒன்று கூடி நடனம் ஆடினர். அப்போது சில வாலிபர்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பினர்.




இதுதொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் நேற்று காலை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோ வெளியான சில மணி நேரத்தில், பத்ராவதி சீகேபாகி பகுதியிலும், பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பிய வீடியோ வெளியானது.



டயருக்கு தீ இந்த வீடியோக்களால் பா.ஜ., தலைவர்கள், ஹிந்து அமைப்பினர் கடும் கோபம் கொண்டனர். 'இந்தியாவில் இருந்து கொண்டு, பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பும் தேச துரோகிகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கோரிக்கை விடுத்தனர்.



இதுகுறித்து ஷிவமொக்கா எஸ்.பி., மிதுன்குமார் கூறுகையில், ''பத்ராவதியில் மிலாடி நபி பேரணியின்போது, பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியது பற்றி, எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. பத்ராவதி ஓல்டு டவுன் போலீசார், தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.



வீடியோவில் உள்ளவர்களை கண்டறியும் பணி நடக்கிறது. வீடியோவை தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி உள்ளோம்,'' என்றார். பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியவர்களை கைது செய்ய கோரி, நேற்று மாலை ஷிவமொக்கா டவுனில் ஹிந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர். சாலையில் டயர்களுக்கு தீ வைத்து எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

மதமாற்றம் இதற்கிடையில், நேற்று முன்தினம் இரவு, பத்ராவதியில் நடந்த மிலாடி நபி பேரணி துவக்க நிகழ்ச்சியில், பத்ராவதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., சங்கமேஸ்வர் பேசிய வீடியோ வெளியானது.




அதில், ''நான் நான்கு முறை எம்.எல்.ஏ., ஆனதற்கு முஸ்லிம் நண்பர்கள் தான் காரணம். இறுதி வரை உங்கள் குடும்பத்தின் மகனாக இருப்பேன்.



அடுத்த ஜென்மத்தில் முஸ்லிமாக பிறக்க ஆசைப்படுகிறேன்,'' என, பேசி இருந்தார். அவரது பேச்சுக்கு பா.ஜ., தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.



எதிர்க்கட்சி தலைவர் அசோக் கூறுகையில், ''காங்கிரஸ் அரசை திப்பு, ஹைதர் அலி அரசு என்று, நாங்கள் கூறுவது இப்போது உண்மையாகி விட்டது. மாநிலத்தில் உள்ள ஹிந்துக்களை அவமதிக்கும் வகையில், முஸ்லிமாக பிறக்க வேண்டும் என்று, சங்கமேஸ்வர் பேசி உள்ளார். காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் பேசுவதை எல்லாம் பார்த்தால், மதமாற்றத்தை இவர்களே ஆதரிப்பது போன்று உள்ளது,'' என்றார்.

Advertisement