ஐகோர்ட் வக்கீல் கொலையில் பள்ளி தாளாளர் மகனும் கைது

திருப்பூர்:ஐகோர்ட் வக்கீல் கொலை வழக்கில், அவரது உறவினரான பள்ளி தாளாளரின் மகனையும் போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம், முத்து நகரை சேர்ந்தவர் முருகானந்தம், 41; மாற்றுத்திறனாளியான இவர் ஐகோர்ட் வக்கீல். இவருக்கும், இவரது சித்தப்பா குடும்பத்தினருக்கும் முன்விரோதம் இருந்தது.

தாராபுரம் பஸ் ஸ்டாண்ட் அருகே சித்தப்பா நடத்தி வரும் தேன்மலர் மெட்ரிக் பள்ளி முறையான அனுமதியில்லாமல், விதிமீறி கட்டடம் கட்டப்பட்ட குற்றச்சாட்டில், வகுப்பறைகளை இடிக்க கோர்ட் உத்தரவிட்டது.

இதற்கான அளவீட்டு பணியை பார்க்க, ஜூலை 28ல் உறவினர்கள் நான்கு பேருடன் முருகானந்தம் சென்றபோது, கூலிப்படையினர் அவரை வெட்டி கொன்றனர்.

இதில், அவரின் சித்தப்பா, பள்ளி தாளாளர் தண்டபாணி உட்பட, 17 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேலும், வெளிநாட்டில் உள்ள பள்ளி தாளாளரின் மகன் கார்த்திகேயன், 32, என்பவர் மீது புகார் எழுந்தது. நேற்று முன்தினம் இரவு, இந்தோனேஷியாவில் இருந்து திருச்சி வந்த கார்த்திகேயனை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

Advertisement