போலந்தை தொடர்ந்து ருமேனியாவிலும் ஊடுருவிய ரஷ்ய டிரோன்

5

புக்காரெஸ்ட்: போலந்தை தொடர்ந்து மற்றொரு ஐரோப்பிய நாடான ருமேனியாவிலும் ரஷ்ய டிரோன் ஊடுருவி சென்றது ஐரோப்பிய நாடுகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.


உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த சூழ்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர், போலந்து வான்வெளியில் ரஷ்ய டிரோன்கள் அத்துமீறி நுழைந்தன. இதனை அந்நாட்டு ராணுவம் சுட்டு வீழ்த்தியது. போலந்து வான்வெளியை பாதுகாப்பதற்கு உதவும் வகையில் ரபேல் விமானங்களை பிரான்ஸ் அனுப்பி வைத்தது.


இந்நிலையில் ருமேனியா வான்வெளியிலும் ரஷ்ய டிரோன் அத்துமீறி நுழைந்துள்ளதாக அந்நாடு குற்றம்சாட்டி உள்ளது. இதனை போர் விமானங்கள் மூலம் கண்காணித்ததாகவும், உக்ரைனின் எல்லை அருகே இந்த டிரோன் காணப்பட்டதாகவும் அந்நாடு தெரிவித்துள்ளது.

சிலியா வெச்சே பகுதியில் முதலில் காணப்பட்ட இந்த டிரோன் பிறகு ரேடாரில் இருந்து மறைந்து விட்டதாகவும், அதேநேரத்தில் மக்கள் நிறைந்த பகுதிகளில் இந்த டிரோன் காணப்பட்டதாகவும், அச்சுறுத்தல் ஏதும் இல்லை எனவும் தெரிவித்துள்ளது.
அதேநேரத்தில் இந்த டிரோன் தவறுதலாக ருமேனியாவிற்குள் நுழைந்து இருக்காது என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

Advertisement