சித்தாபுதுார் குடியிருப்பு பயனாளிகளுக்கு ஒதுக்கீடு

கோவை; தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், கோவை சித்தாபுதுாரில் கட்டியுள்ள வீடுகளை, சென்னையில் இருந்து துணை முதல்வர் உதயநிதி, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நேற்று துவக்கி வைத்தார்.

அதிகாரிகள் கூறுகையில், 'தரைத்தளம் மற்றும் 6 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு, ரூ.14.71 கோடியில் கட்டப்பட்டது. ஒவ்வொரு குடியிருப்பிலும் ஒரு ஹால், சமையலறை, படுக்கை அறை, கழிவறை வசதிகள் உள்ளன.

ஒரு வீட்டின் மதிப்பு ரூ.13.25 லட்சம். மத்திய அரசு மானியம் ரூ.1.5 லட்சம், மாநில அரசு மானியம் ரூ.7 லட்சம். பயனாளிகள் பங்களிப்பு தொகை ரூ.4 லட்சத்து 63 ஆயிரம் செலுத்த வேண்டும். குடியிருப்பில் இருந்தும் வெளியேறும் கழிவுநீர் பாதாள சாக்கடை இணைப்பில் வெளியேற்றப்படுகிறது. தீயணைப்பு, லிப்ட் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன' என்றனர்.

கோவையில் நடந்த நிகழ்ச்சியில், கலெக்டர் பவன்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். வீடுகளை பார்வையிட்ட கலெக்டர், 11 பயனாளிகளுக்கு ஒதுக்கீடு உத்தரவு வழங்கினார்.

மேயர் ரங்கநாயகி, துணை மேயர் வெற்றிச்செல்வன், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய நிர்வாக பொறியாளர் ஜீவானந்தம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Advertisement