மியான்மரில் பள்ளிகள் மீது ராணுவம் குண்டுமழை; 19 மாணவர்கள் பலி

3


நைப்பியிதோ: மியான்மரில் பள்ளிகள் மீது ராணுவம் குண்டுமழை பொழிந்ததில் மாணவர்கள் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மியான்மரில் அரசுக்கு எதிராக சின் மற்றும் ராக்கைன் ஆகிய மாநிலங்களில் அராகன் கிளர்ச்சிப் படை செயல்பட்டு வருகிறது. இந்த படை, தனிநாடு கோரி பல ஆண்டுகளாக அரசு ராணுவத்துடன் போர் நடத்தி வருகிறது.

இந்த நிலையில், அராகன் ராணுவத்தினருக்கும், மியான்மர் அரசு ராணுவத்தினருக்கும் இடையே நேற்று இரவு சண்டை நடைபெற்றது. அப்போது, கியாக்தவ் டவுன்ஷிப் பகுதியில் உள்ள இரு தனியார் பள்ளிகளின் மீது சுமார் 227 கிலோ வெடிமருந்துகளைக் கொண்ட வெடிகுண்டுகளை வீசி அந்நாட்டு ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில், 19 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். பலியானவர்களுக்கு 15 முதல் 21 வயது இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

அப்பாவி மாணவர்களை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக அராகன் ராணுவம் கூறியுள்ளது.

இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள ஐநா சபையின் குழந்தைகள் நிறுவனமான யுனிசெப், இது ஒரு கொடூரத் தாக்குதல் என்று குறிப்பிட்டுள்ளது.

Advertisement