'தி.மு.க., அரசின் அலட்சியத்தால் 100 நாள் வேலையில் குளறுபடி'

10

சென்னை: பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை: கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன், செயல்படுத்தப்பட்டு வரும் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணியாற்ற, தமிழகத்தில், 85 லட்சத்து, 70,000 குடும்பங்கள் பதிவு செய்துள்ளன. இவர்களுக்கு, அதிகபட்சமாக ஆண்டுக்கு, 100 நாட்கள் வரை வேலை வழங்க முடியும்.


ஆனால், நடப்பு நிதியாண்டில் இதுவரை ஒரு குடும்பத்துக்கு, சராசரியாக, ஒன்பது நாள் மட்டுமே வேலை வழங்கப்பட்டுள்ளது. இதே நிலை தொடர்ந்தால், சராசரியாக 20 நாள் மட்டுமே வேலை வழங்க முடியும். நுாறு நாள் வேலை திட்டத்தை, 150 நாட்களாக அதிகரிப்போம் எனக்கூறி, ஆட்சிக்கு வந்த தி.மு.க., 20 நாட்கள் மட்டுமே வேலை வழங்குகிறது. இதற்கு, தி.மு.க., அரசின் அலட்சியமும், துரோகமும்தான் காரணம்.




இந்த திட்டத்தின் கீழ், நடப்பாண்டில் 12 கோடி மனித வேலை நாட்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குடும்பத்திற்கும், 50 நாட்கள் வேலை வழங்க வேண்டுமானால், 43 கோடி மனித வேலை நாட்கள் வேண்டும். இதற்கு தி.மு.க., அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இனியும் தாமதிக்காமல், அதிக வேலை நாட்களை வழங்கவும், அதற்கு தேவையான நிதியை பெறவும் தி.மு.க., அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement