விவசாய உற்பத்தியை அதிகரிக்க உர பற்றாக்குறையை தவிர்க்கணும்; பிரதமர் மோடியிடம் ஸ்டாலின் கோரிக்கை

2

சென்னை: விவசாய உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் உரப் பற்றாக்குறையை தவிர்த்திட தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய உரங்களை விரைந்து வழங்கிட நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்து உள்ளார்.


இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது: நாட்டின் முக்கியமான நெல் உற்பத்தி மாநிலங்களில் தமிழகம் ஒன்றாகும். மாநிலத்தில் விவசாய உற்பத்தியை அதிகரிக்கவும், விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தவும் தமிழக அரசு தொடர்ந்து உயர் முன்னுரிமை அளித்து வருகிறது. விவசாய உற்பத்தியை அதிகரிக்க ஊக்கமளிக்கும் வகையில் குறிப்பான பகுதிக்கு ஏற்ப திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அத்துடன், தேவையான வேளாண் இடுபொருட்கள் கிடைப்பதையும் சீராக கண்காணித்தும் வருகிறது.

பருவமழை முன்கூட்டியே தொடங்குவதைக் கருத்தில் கொண்டு, தமிழகத்தில் 2025 ஜூன் மாதம் முதல் காரிப் பருவத்தில் நெற்பயிர் முழுவீச்சில் பயிரிடப் பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி, 5.661 லட்சம் ஹெக்டேரில் நெல் பயிரிடப் பட்டுள்ளது. இது கடந்த வருடத்தில் பயிரிடப்பட்ட 5.136 லட்சம் ஹெக்டேர் பரப்பளவைவிட 0.525 லட்சம் ஹெக்டேர் (10%) அதிகமாகும். இதனால் மாநிலம் முழுவதும் நேரடி உரங்களுக்கு அதிக தேவை நிலவுகிறது.


மாநிலத்தில் பெய்துவரும் பரவலான மழை மற்றும் முக்கிய நீர்த்தேக்கங்களில் தண்ணீர் போதுமான அளவில் உள்ளதன் காரணமாக, விவசாய உற்பத்திக்குத் தேவைப்படும் யூரியா, டிஏபி, எம்ஓபி மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்களை உற்பத்தியாளர்களால் மத்திய அரசின் வழங்கல் திட்டத்தின்படி 2025 ஏப்ரல் முதல் 2025 ஆகஸ்ட் வரை வழங்கிடவில்லை. மேலும் அவர்களால் மொத்த ஒதுக்கீட்டில் 57% அளவிற்கு மட்டும் தான் வழங்கப்பட்டு உள்ளது.


தமிழகத்தின் தற்போதைய காரிப் மற்றும் எதிர் வரும் ராபி பருவத்திற்கு, உரப் பற்றாக் குறையை தவிர்த்திடும் வகையில், தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய 27,823 மெட்ரிக் டன் யூரியா, 15,831 மெட்ரிக் டன் டிஏபி, 12,422 மெட்ரிக் டன் எம்ஓபி மற்றும் 98,623 மெட்ரிக் டன் என்பிகே காம்ப்ளக்ஸ் உரங்களை உடனடியாக வழங்கிட வேண்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement