பின்தங்கிய மக்களின் முழு உரிமைகளை பாதுகாப்போம்; ராகுல் வாக்குறுதி

2

புதுடில்லி: பாஜ எத்தனை பொய்களை சொன்னாலும், சதித்திட்டங்களை தீட்டினாலும், பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் முழு உரிமைகளை பாதுகாப்போம் என்று கூறி, பீஹார் சட்டசபை தேர்தலுக்கான வாக்குறுதிகளை ராகுல் வெளியிட்டுள்ளார்.

பீஹார் சட்டசபைக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையொட்டி, அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். காங்கிரஸ் கட்சி, ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி அமைத்து இந்தத் தேர்தல் சந்திக்கிறது.

தேர்தலுக்காக எதிர்க்கட்சியினர் பல்வேறு வாக்குறுதிகளை அறிவித்து வரும் நிலையில், பிற்படுத்தப்பட்ட மக்களை குறிவைத்து சில வாக்குறுதிகளை காங்., எம்பியும், எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் இன்று வெளியிட்டுள்ளார்.

அவரது அறிக்கை; பாஜ எத்தனை பொய்களை சொன்னாலும், சதித்திட்டங்களை தீட்டினாலும், மிகவும் பின்தங்கிய, தலித், பழங்குடி, சிறுபான்மை மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் முழு உரிமைகளை நாங்கள் பாதுகாப்போம்.

பீகாரில், மிகவும் பின்தங்கிய சமூகத்தை வலுப்படுத்தவும், அவர்களின் பங்களிப்பை அதிகரிக்கவும், 'மிகவும் பின்தங்கிய நீதி அறிக்கை' என்ற பெயரில் வலுவான வாக்குறுதிகளை அளித்துள்ளோம்.

இந்த சமூகங்களின் முன்னேற்றத்திற்கு கல்வியே மிகப்பெரிய ஆயுதம். எனவே இத்துறையில் அவர்களின் செயல்பாடுகளை அதிகரிக்க சிறப்பு தீர்மானங்கள் உள்ளன:

தனியார் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களிலும் இனி இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படும்.

தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு செய்யப்பட்ட பாதி இடங்கள் தலித்,பழங்குடி,பிற்படுத்தப்பட்டோர்,மிகவும் பிற்படுத்தப்பட்டோர் குழந்தைகளுக்கு வழங்கப்படும். தகுதியற்றவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படுவது தடுத்து நிறுத்தப்படும்.

இது வெறும் கல்வி மட்டுமல்ல, மிகவும் பின்தங்கியோருக்கான சமத்துவம் மற்றும் கண்ணியத்திற்கான போராட்டம். இதுவே சமூக நீதி மற்றும் சமச்சீரான வளர்ச்சியின் உண்மையான உத்தரவாதம், எனக் குறிப்பிட்டுள்ளர்.

Advertisement