60 கார்கள் வாங்கி மோசடி; அன்னுார் முரளி கைது

1

திருப்பூர்; திருப்பூர், கோவை மாவட்டங்களில், பிறரது ஆவணங்களை வைத்து வங்கிக்கடன் பெற்று வாங்கப்பட்ட 60 கார்களுடன் தலைமறைவான ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம், சாமளாபுரம், கரும்பாளையத்தை சேர்ந்தவர் முருகேசன், 40. இவரது வீடு அருகே வசித்து வந்த, கோவை மாவட்டம், அன்னுாரை சேர்ந்த முரளி, 41 என்பவர், முருகேசனுக்கு பழக்கமானார். 'கார்களை வாங்கி, வாடகைக்கு விட்டால், நன்கு சம்பாதிக்கலாம். கார் வாங்கி கொடுத்தால், மாத தவணையை நானே செலுத்துகிறேன்' என்று முரளி கூறினார். இதை நம்பிய முருகேசன், தனது ஆவணங்கள் மூலம் வங்கி கடன் மூலம் காரை வாங்கி கொடுத்தார். சில மாதங்கள் கடன் தவணையை செலுத்தி வந்த முரளி, திடீரென தலைமறைவானார். இதுகுறித்து முருகேசன் அளித்த புகாரின் பேரில், முரளியை கைது செய்தனர்.

போலீசார் கூறுகையில், ''எல்லாரையும் கவரும் வகையில் முரளி பேசுவார்.

பழகியவர்களுடன், அவர்களது பெயர்களில் வங்கியில் கடன் பெற்று கார்களை முரளி பெறுவது வழக்கம். வங்கியில் கடன் வாங்குவது உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளையும் அவரே செய்து கொடுத்து, காரைப் பெறுவார். சில மாதங்கள் தவணையை செலுத்தியவுடன் தலைமறைவாகிவிடுவார். ஒவ்வொரு காரின் மதிப்பும், ஐந்து லட்சம் முதல், 30 லட்சம் ரூபாய் வரை இருக்கும்.

திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் 60 கார்களை பெற்று ஏமாற்றியுள்ளார். இதுவரை கார்கள் எதையும் பறிமுதல் செய்யவில்லை. முரளியை கஸ்டடி எடுத்து விசாரித்தால்தான் உண்மை தெரியவரும்'' என்றனர்.

Advertisement